கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 27 ஜனவரி, 2011

பிரம்மாவின் வயது



     உலகம் தோன்றியதிலிருந்தே ஏதோ ஒரு கணக்குடன் தான் அது இயங்கி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படை கணக்கு தான் பங்சாங்கம். அதுதான் முதலில் பிரம்மாவிற்கு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே பிரம்மன் தன் படைத்தல் தொழிலை மேற்கொண்டுள்ளான். காலங்கள் எல்லாமே மிக அழகாக பிரிக்கப்பட்டுள்ளது. 60 நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பட்சம். இரண்டு பட்சம் ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயனம். இரண்டு அயனங்கள் ஒரு வருடம். இது தான் மனிதனுக்கான காலஅளவுகோல்.

     இதேபோன்று தேவர்களுக்கென்று பார்க்கும்போது 1 மனித வருடம் 1 ஒரு தெய்வீக நாளாகக் கொள்ளப்படும். 360 தெய்வீக நாட்கள் சேர்ந்தது ஒரு தெய்வீக ஆண்டாகும். இதுபோன்று 12,000 தெய்வீக ஆண்டுகள் சேர்ந்தது தான் ஒரு சதுர் யுகமாகும்.


1
மனுஷ வருஷம்
1 தெய்வீக நாள்
360
தெய்வீக நாள்
1 தெய்வீக ஆண்டு
12000
தெய்வீக ஆண்டுகள்
1 சதுர் யுகம்



     ஒரு சதுர் யுகமென்பது நான்கு யுகங்களின் சேர்க்கையாகும். அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் இந்த நான்கும் சேர்ந்ததே சதுர் யுகமாகும்.

கிருத யுகம் 4800 தெய்வீக ஆண்டுகள் 17,28,000 மனித ஆண்டுகள்
திரேதா யுகம் 3600 தெய்வீக ஆண்டுகள் 12,96,000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம் 2400 தெய்வீக ஆண்டுகள்   8,64,000 மனித ஆண்டுகள்
கலி யுகம் 1200 தெய்வீக ஆண்டுகள்   4,32,000 மனித ஆண்டுகள்
சதுர் யுகம் 12000 தெய்வீக ஆண்டுகள் 43,20,000 மனித ஆண்டுகள்


     71 சதுர் யுகங்களின் முடிவு ஒரு மநுவந்தரமாகும். அதாவது 14 மநுவந்தரங்கள் சேர்ந்தது ஒரு கல்பம். அதாவது 14 X 71=994 சதுர் யுகங்கள். மிச்சம் 6 சதுர் யுகங்கள், மொத்தம் 1000 சதுர்யுகங்கள் சேர்ந்தது தான் ஒரு கல்பம். அதாவது 432 கோடி மனித ஆண்டுகள் முடிந்தால், அது தான் ஒரு கல்பம். அதுதான் பிரம்மாவிற்கு ஒரு பகல். ஆக இரண்டு கல்பம் சேர்ந்ததே பிரம்மாவிற்கு ஒரு நாள். அதாவது 864 கோடி மனித ஆண்டுகள்.

71 சதுர் யுகம்1 மநுவந்தரம்                  8,52,000 தெய்வீக ஆண்டுகள்
14 மநுவந்தரம்1 கல்பம்         429,40,80,000 மனித ஆண்டுகள்
மிச்சம் 6 சதுர் யுகம்             2,59,20,000 மனித ஆண்டுகள்
1000 சதுர் யுகம்1 கல்பம்         432,00,00,000 மனித ஆண்டுகள்
2 கல்பம்1 பிரம்ம நாள்         864,00,00,000 மனித ஆண்டுகள்
360 பிரம்ம நாள்1 பிரம்ம ஆண்டு 3,11,040,00,00,000 மனித ஆண்டுகள்


     இந்த கணக்கினைப் பார்த்தால் நமக்கு நிச்சயம் மூச்சு முட்டும். இன்றைய மனிதன் சராசரியாக 60 முதல் 80 ஆண்டுகள் தான் உயிர் வாழ்கிறான். இதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பிரம்மா தன் ஒரு வயதினை அடைவதற்குள் நமெல்லாம் எத்தனை முறை பிரம்மானால் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்போம் என்பதை உட்கார்ந்து தான் எண்ணணும். உலக நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் நடப்பவையே. கால சுழற்சியே. உதாரணமாக இராமன் பிறந்தது திரேதா யுகத்தில் தான். பிரம்மாவின் ஒரு வயதிற்குள் இராமன் மட்டுமே ஆயிரம் தடவை பிறந்திருப்பான். நீங்களும் நானும் அப்படியானால் எத்தனை தடவை பிறந்திருப்போம்? இந்த பிறவிப் பெருங்கடலில் எத்தனைப் பிறவிகளாய் நீந்திக் கொண்டிருக்கிறோமென்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இந்த பதிவினை நானும் எத்தனை தடவை எழுதியிருப்பேனோ? நீங்களும் எத்தனை தடவை இதைப் படித்து கொண்டிருப்பீர்களோ? என்பது அந்த பிரம்மனுக்கே வெளிச்சம்?

நன்றி: விக்கிபீடியா.

புதன், 19 ஜனவரி, 2011

அனுபவ பூக்கள்-1

வெறும் ஜோதிடக்கட்டுரைகள் மட்டும் எழுதினா ரொம்ப போரடிக்கும்ன்னு பதிவன்பர் முருகேசன் சொன்ன கருத்தையேற்று என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து எழுதணும்ன்னு நினைச்சப்ப உதயமானது தான் இந்த அனுபவ பூக்கள். இதிலே பெரும்பாலும் ஜோதிடம் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதிலே எனக்கு ஒரு வசதி இருக்கிறது எப்படி வேண்டுமானாலும் பதிவை சுருக்கி / மாற்றி எழுதிக் கொள்ளலாம்.

ஜோதிடம் கத்துக்கணும்ன்னு நிறைய பேருக்கு ஆசை இருக்கு. ஏன் கத்துகணும்கிறதுக்கு ஒரு ஒருத்தர் ஒரு ஒரு காரணத்தை சொல்லறதை நாம கேட்கலாம். ஜோதிடத்தில நாட்டம் வரம்னுனா அது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வயதும், பக்குவமும், முதிர்ச்சியும் வந்த பிறகே கத்துகிறாங்கன்னு சொல்லலாம். அது உண்மையும் கூட. அதையும் தாண்டி ஒரு சிலருக்கே இளம் வயதிலேயே ஜோதிட அறிவும், ஞானமும் கிடைச்சிருக்கு. உண்மையிலேயே அவங்க கடவுளோடோ அனுக்கிரகம் பெற்றவங்க தாங்க.
என் நண்பர்கள சில பேருக்கு ஜோதிடம் கத்துகிடணும் ஆசையா எங்கிட்ட கேட்டாங்க. நான் நீ ஏன் கத்துக்கணும் ஆசை படறன்னு கேட்டேன். அதுக்கு நீங்க ஜோதிடம் சொல்றப்ப அடிக்கடி என் கைய புடிச்சி பார்த்து சொல்றீங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னார். அது எல்லா ஜோதிடரும் பண்றதுதானேன்னு சொன்னேன். அதாங்க நானும் ஜோதிடம் கத்துகிட்டா நானும் எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்களோட கையை தொட்டு பிடிச்சி பார்த்துக்கலாம்ல்ல அது எனக்கு ஒரு வசதி தானங்கன்னு சொன்னாரு. இப்ப நானா போயி ஒரு பொண்ணோட கையை புடிச்சா நான் அடிவாங்கிறதுதான் மிச்சம் அதே சமயம் எனக்கு ஜோசியம் சொல்ல தெரிஞ்சிருந்தா எல்லாரும் எங்க என் கைய கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்னு அவங்களே அவங்க கைய கொடுப்பாங்கல்லே,, நீங்க வேஸ்ட்ங்கன்னு சொன்னாரு.

வேறு ஒரு நண்பர் ஒருத்தர் அவருக்கும் ஜோதிடம் கத்துக்கணும் ரொம்ப ஆசை. அவரு அடிக்கடி எங்கிட்ட கேட்பதுண்டு எப்படிப்பா நீ இந்த ஜோதிடத்தை கத்துகிட்ட? உங்க வீட்டில யார் யாரெல்லாம் ஜோதிடம் பார்ப்பாங்க? உங்க அப்பா ஜோதிடரா? உங்க தாத்தா ஜோதிடரா? அதுக்கு நான், எங்க குடும்பத்துல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யாரும் இந்த தொழில்ல இல்ல. இது நானா என்னுடைய சொந்த முயற்சியாலும் கடவுளோட அனுக்கிரகத்ததாலும் நானே கத்துகிட்டது தான் யாரும் எனக்கு சொல்லி தரல. அது எப்படிப்பா முடியும்ன்னு கேட்டாரு. நான் சொன்னேன் முடியும் சார் அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேடல்கள் உண்டு.  நம்ம விஜய் பாட்டுல வருமே "தேடல் இல்லா வாழ்க்கை முடிந்து விடும்". அதுபோல தான் நாம எதை தேடறமோ அது நிச்சயமா நமக்கு கிடைக்கும். இது தான் உலகம். நீங்க பணத்தை தேடினா அது உங்களுக்கு கிடைக்கும். அதுபோல அறிவை தேடினாலும் அது கிடைக்குமுன்னு சொன்னேன்.

போனப் பதிவில் செவ்வாய் தோஷத்தை பற்றி எழுதி இருந்தேன். அதுல்ல பரிகாரத்தைப் பற்றி சொல்லிருந்தேன். நான் பார்த்த சில கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகர்களுக்கு நான் ஒரு சில பரிகாரகங்களை செய்ய சொல்லியிருந்தேன். எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர் 35 வயதிற்கு மேல் ஆகிறது. அவருக்கு கடுமையான செவ்வாய் தோஷம் தான். உண்மையிலேயே அவருடைய 7மிட நீச்ச செவ்வாயினால் தான் அவருக்கு இத்தனை வயதாகியும் கூட அவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறார்.  அவருக்கு இந்த ஜோதிடத்தில்லாம் நம்பிக்கை கிடையாது. அவர் நேரடியாக என்னிடம் ஜோதிடப் பலனும் கேட்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த நண்பர் தான் இன்னும் அவருக்கு கல்யாணம் ஆக வில்லையே என்று அவர் சார்பாக பலன் கேட்டார். நான் சொன்ன பலன்களை அப்படியே என் நண்பர் தன் உறவினரிடம் சொல்லி அப்படியே பரிகாரகங்களையும் செய்ய சொன்னார்.  அவரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போயிட்டு வந்தார். வந்துட்டு, அவரோ ஜோதிடமெல்லாம் சும்மா பொய் இப்ப பாருங்க நான் அந்த கோவிலுக்கு போயிட்டு வந்துட்டேன் இன்னும் ஒன்னும் நடக்கலன்னு சொல்றாரு. அதன்பிறகு அந்த நண்பர் என்னை தொடர்பு கொண்டு இந்த மாதிரி சொல்றாருன்னு சொன்னாரு. அப்புறம் நான் விசாரித்ததில் அந்த உறவினர் எப்படி சாமி கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறாருன்னு பாருங்க. அந்த உறவினரோ பெரிதாக நம்பிக்கையில்லாமல் அரைகுறை மனதோடு பரிகாரம் செய்ய வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அந்த நேரம் கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். அதனால் அந்த கோவில் தீர்த்தமெல்லாம் கலங்கிய நிலையிலிருந்ததால் அந்த தீர்த்தத்தில் எப்படி குளிப்பது என்று வெறுமனே தலையில் தீர்த்தத்தை தெளித்து விட்டு
சும்மா சாமி கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்.


இப்படி செய்து விட்டு வந்த பிறகு பலன் மட்டும் கிடைக்க வேண்டுமென நினைப்பது எத்தனை தவறான ஒன்று. பரிகாரம் என்பதே செய்த பாவ கர்ம வினைகளை தொலைப்பதற்காக தான் செய்கிறோம். அங்கும் வந்து கடவுளை நம்பாமல், மதியாமல் , ஒரு பக்தி சிரத்தையுமில்லாமல் வணங்கினால் எப்படி பலன் கிடைக்கும்? பிறகு நான் சொன்னேன் முதலில் அவருக்காக நீங்கள் பலன் கேட்டதே தவறு. அதையும் தாண்டி வணங்கிய விதம் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்கள் இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கடவுளை முழுமையாக நம்பி பிறகு வணங்கினால் மட்டுமே கடவுள் நம் பாவங்களை மன்னித்து நமக்கு இந்த ஜென்மத்தில் ஒரு வாய்ப்பு அளித்து ஒரு நல்ல வாழ்க்கையும் அளிப்பார். அய்யா நீங்கள் ஒருவரிடம் ஒரு சகாயத்தை வேண்டி செல்லுகின்றீர்களென்று வைத்து கொள்வோம். அவரை மதிக்காமல் அவரிடமிருந்து நீங்கள் கண்டிப்பாக அந்த சகாயத்தைப் பெற்றுவிட முடியுமா? சாதாரண மனிதரிடமிருந்தே சகாயம் பெறுவதற்கு நாம் எத்தனை மரியாதை முறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க கடவுளை நாம் உரிய முறையில் வழிபட்டு வேண்டிய சாகாயத்தை அடைவதில் என்ன தவறிருக்க முடியும். அந்த வழிமுறைகளை விருப்பத்துடன் செய்யாமல் பலன் மட்டும் வேண்டுமென்பது எப்படியிருக்கிறது தெரியுமா நான் உழைக்க மாட்டேன் ஆனால் எனக்கு கூலி மட்டும் வேண்டுமென்பது போல உள்ளது. நான் கண்டிப்பாக அந்த உறவினரை குறை கூற மாட்டேன். ஏனெனில் அது அவருடைய அறியாமையால் விளைந்த ஒன்றே அன்றி வேறொன்றும் கிடையாது. நாம் பெற்றப்பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்கிற மனப்பான்மை எல்லாருக்குமிருப்பதை போலத் தான் நம்மை படைத்த கடவுளுக்கும் நாம் அவரை வணங்க வேண்டுமென்கிற விருப்பமிருப்பதில் ஒரு நியாயமிருக்கத் தான் செய்கிறது.

இதே மாதிரி நான் ஜாதகம் பார்த்த ஒருவருடைய ஜாதகத்தில் 7மிட செவ்வாய் நீச்சமடைந்து பலமிழந்து இருந்தது. ஆனால் ஜாதகம் பார்க்க வந்தவரோ என்னுடைய நெருங்கிய நண்பர். ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு ஜாதகம் பார்ப்பதுன்னாலே எனக்குள்ளே பெரிய தயக்கம் வந்துவிடும். ஏன்னா நான் ரொம்ப நேர்மையா இருக்கறத இருக்க மாதிரி அப்படியே சொல்லி விடுவேன். ஆனால் ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு பார்க்கும் போது அப்படி சொல்ல முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில அடிக்கடி நான் மாட்டிகிடறதுண்டு. அப்பெல்லாம் நான் என்னையும் அறியாமல் உண்மையை மாத்தி சொல்லி தான் இருக்கிறேன். அது ஏன்னு எனக்கே இன்னைக்கு வரைக்கும் தெரியல. என் நெருங்கிய நண்பர்களுக்கு என்னை அறியாமலே உண்மையை மறைத்து பல தடவை சொல்லியிருக்கிறேன். அப்படிதான் இந்த ஜாதகருக்கும் நான் சொல்லிட்டேன். அதாவது என்னன்னா இந்த ஜாதகருக்கு 7ல செவ்வாய் நீச்சமடைந்துமிருக்கிறதோடுலில்லாம சனி பகவானும் சேர்ந்து இருக்கிறார். என் நண்பரோ அந்த பையனுக்கு கட்டபோற அந்த பெண்ணோட ஜாதகத்ததையும் காட்டி கல்யாணம் பேசிமுடிச்சாச்சு நிச்சயம் பண்ணப் போறோம்ன்னு சொன்னாரு. நானும் அந்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்துட்டு இது ரெண்டும் சேராதுன்னு நன்றாக தெரிந்திருந்தும் சரி கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்லிட்டேன்.ஆனால் மனசு உறுத்திக்கிட்டேயிருந்தது. கொஞ்ச நாள் போனதும் என் நண்பர் என்னிடம் கொஞ்சம் தயங்கி சொன்னார். நிச்சயதார்த்தம் நின்னு போச்சுன்னு. அய்யோ நல்லா தெரிஞ்சிருந்தும் நாம இப்படி பொய் சொல்லிட்டோமே என்று நான் எனக்குள்ளே நினைத்து கொண்டு பரவாயில்லை விடுங்க  வேற நல்ல வரன் வரும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா காத்துகிட்டுயிருங்கன்னு சொன்னேன். அப்போது இன்னொரு தடவை அந்த ஜாதகத்தை நான் பார்த்த போது அந்த ஜாதகர் படப்போற அவஸ்தைகள் எல்லாம் என் கண்முன்னே சற்று வந்து போனது. ஆனால் இந்த தடவையும் அவருகிட்ட அந்த உண்மையை சொல்ல முடியல. அதே மாதிரி கொஞ்ச நாள் போனதும் என் நண்பர் என் கிட்ட சொன்னாரு இந்த தடவை அந்த ஜாதகர் ஒரு பெண்ணை காதலிப்பதையும் அதனால எழுந்துள்ள பிரச்சனைகளைப் பற்றியும் சொன்னாரு. அதுவும் நான் எதிர்பார்த்ததைப் போலவே இருந்ததது. சரி இந்த பெண்ணையாவது கல்யாணம் பண்ணாலாமான்னு கேட்டாரு.இந்த கல்யாணமும் நடக்காதுன்னு தெரிந்திருந்தும் முயற்சி பண்ணி பாருங்கன்னு சொன்னேன். திரும்பி கொஞ்ச நாள் பொறுத்து என் நண்பர் சொன்னாரு அந்த காதலும் முறிந்து போச்சுன்னு. இப்ப எப்பதான் கல்யாணம் நடக்கும்ன்னு கேட்கிறார். இப்பவும் எனக்கு உண்மையை சொல்ல தயக்கமா தான் இருக்கு. அதை ஏன் இங்க சொல்றேன்னா செவ்வாய் தோஷம் ரொம்ப கடுமையா இருந்தா ரொம்ப பிரச்சினைதாங்க. இவருக்கும் என் நண்பரிடம் இந்த தோஷப் பரிகாரங்களை செய்ய சொன்னேன். ஆனால் அந்த ஜாதகருக்கோ இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை அவரு அதேல்லாம் பண்ண மாடடாருன்னு சொன்னாரு. அப்ப ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னேன். இந்த மாதிரி இருந்தா எப்படிதான் பாபவிமோசனம் கிடைக்கும்.

பூக்கள் மலரும்........

புதன், 12 ஜனவரி, 2011

செவ்வாய் தோஷம்!

திருமண வரன் பார்க்க ஆரம்பித்தவுடனே எல்லாரும் அடிக்கடி அதிகமா பேசற விஷயம் இந்த செவ்வாய் தோஷம் தான் என்றால் அது மிகையாகாது. மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷமாமே? பொண்ணுக்கு செவ்வாய் தோஷமாமே? அப்படின்னு குடும்பத்திலேயும் அக்கம் பக்கத்திலேயும் பேசிக்கிறதை நாம நல்லாவே கேட்டு இருப்போம். ஏன் 1980களில் இந்த செவ்வாய் தோஷத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படமே வந்து மக்கள் மனதில் ஒரு விதை மாதிரி விதைத்திட்டு போச்சுன்னு கூட சொல்லாம். ஏன் இந்த செவ்வாய் தோஷத்துக்கு இவ்வளவு பில்ட்டப்? யார் இந்த செவ்வாய்? மனிதனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்? செவ்வாய் தோஷம்ன்ன என்ன? செவ்வாய் தோஷம் இருக்கிற பொண்ணை கட்டினால் என்ன நடந்து விட போகிறது? செவ்வாய் தோஷம் இருக்கிறவங்களுக்கு ஏன் அவ்வளவு எளிதில் திருமணங்கள் நடப்பதில்லை? இந்த தோஷத்துக்கு பரிகாரமே கிடையாதா? இப்படி பல கேள்விகள் மனதில் நிறைய பேருக்கு எழுந்திருக்கும். இதற்கெல்லாம் ஒரு விடை காணும் ஒரு முயற்சியாக இந்த பதிவு இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.


முதலில் செவ்வாயைப் பற்றி சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். செவ்வாய் ஒரு சிவந்த கிரகம். இதுவும் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கிற ஒரு கிரகம். அதே போல பூமிக்கும் மிக அருகில் இருக்கிற ஒரு கிரகம். அதன் இயல்பிலேயே சிவந்த நிறமுடன் இருப்பதாலேயே அதற்கு செவ்வாய் என்ற பெயர். இந்த செவ்வாய் என்ற பெயர் என்று சூட்டப்பட்டிருக்கும் என்று நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியாது. இந்த கலையே நம் முன்னோர்கள் அருளியது. பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது இந்த கலை. ஆனால் நேற்று வந்த வெளிநாட்டுக்காரன் நாம ஜோதிடத்தல சொன்னதெல்லாம் சரியா இருக்கான்னு டெலஸ்கோப்பில சரிபார்த்துட்டு இப்ப அவன் கண்டுபிடிச்சதுன்னு அவன் பெயரை வைத்து கொள்கிறான். சரி அந்த விஷயத்தைப் பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.

இந்த சிவந்த கிரகத்தை ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று ஒரு சிறப்போடு அழைப்பதுண்டு. ஒவ்வொரு கிரகதிற்கும் ஒரு காரகத்துவம் உண்டு. அந்த வகையில் இந்த கிரகம் பூமிக்கு காரகம் பெற்ற கிரகம். இந்த பூமிக்காரகனுக்கும் திருமண பந்ததிற்கும் என்ன தொடர்பு? ஒரு கிரகம் பல காரகத்துவங்களைப் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த செவ்வாயும் பலக் காரகத்துவங்களைப் பெற்றே உள்ளது. செவ்வாய்க்கு பார்வைகளும் உண்டு. பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. அதே போல் செவ்வாய்க்கும் 4 மற்றும் 7-ஆம் பார்வைகள் உண்டு.


செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஒரு ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,7,8,12 வீடுகளில் செவ்வாய் அமையப் பெற்றால் அந்த ஜாதகத்தைப் பொதுவாக செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் என்று சொல்வார்கள். இது தான் ஜோதிட உலகில் பொது விதி. இந்த ஒற்றை விதியை மட்டுமே வைத்துக் கொண்டு இன்றைய காலத்தில் பெரும்பாலான அரைகுறை ஜோதிடர்கள் உங்கள் மகன் (அ) மகளுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதென்று சொல்லி விடுகிறார்கள். அதற்குபிறகு தான் அவர்களுடைய மகன் (அ) மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் அவர்கள் படும்பாடு பெரும்பாடாகிவிடுகின்றது. செவ்வாய் தோஷமுள்ள பெண்ணையோ (அ) ஆணையோ தான் கட்ட வேண்டுமென்றும் சொல்லிவிடுகின்றனர். உன் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இந்த பையனைக் கட்டினால் உன் பொண்ணுக்கு தாலி தங்காதுன்னு பயமுறுத்தி விடுகின்றனர். தாலி தங்காதுன்னு ஒரு மரண பயத்தைக் காட்டியதால் தான் இந்த செவ்வாய் தோஷம் பிரபலமடைந்திருக்க வேண்டும்ன்னு நான் நினைக்கிறேன். சமானிய மக்களிடம் ஜோதிட அறிவு என்பது பெரும்பாலும் இருப்பது கிடையாது. இதனை எதிர்பார்க்கவும் முடியாது. அப்படி இருக்கையில் அவர்கள் நாடி செல்லும் இடம் என்பது ஜோதிடர்களின் வீடாகத் தான் இருக்க முடியும். அங்ஙனம் இருக்கையில் ஜோதிடர்களின் பங்கு என்பது இங்கு நிறையவே இருக்கின்றது. ஒரு நல்ல ஜோதிடன் தன்னை நாடி வரும் மனிதனின் மனநிலையை அறிந்து பலன்களை சொல்ல வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அரைகுறை ஜோதிடர்களின் தவறான அணுகுமுறையினால் தான் பல தவறான கருத்துக்கள் மக்கள் மனதில் வேரூன்ற காரணமாகும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.


செவ்வாய் தோஷமும் மூடநம்பிக்கையும்.
பொதுவான ஒரு மூடநம்பிக்கை என்னன்னா செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை கட்டினாலே யாராவது ஒருத்தர் செத்துவிடுவாங்க அப்படி என்றது தான் பலபேருடைய மனசில பதிந்திருக்கிற விஷயமா இருக்கு. அதனாலேயே செவ்வாய் தோஷமா அந்த ஜாதகம் வேண்டாம்ப்பா என்று சொல்கிற மனப்பான்மை நிறைய பேரிடம் உள்ளது. ஒரு ஜாதகரின் கணவனோ (அ) மனைவியோ இறந்துபோவாங்கன்னா அதுக்கு அந்த ஜாதகத்தின் கிரக அமைப்பினை நன்றாக ஆராய வேண்டும். அப்படியே ஒரேடியா சொல்லிட கூடாது செவ்வாய் தோஷத்தால தான் தாலி அறுந்து போச்சுன்னு. ஒவ்வொரு ஜாதகத்தோட ஏழாமிடத்திற்கு எட்டாமிடம் தான் தனக்கு வரப் போகிற கணவன் (அ) மனைவியின் ஆயுள் பலத்தை தீர்மானிக்கிறது.  மேலும் தனித்தனியே ஜாதகரின் ஆயுள் பலத்தினை கணிக்க முடியும். இதையெல்லாம் கணித்தப் பிறகே ஆயுள் பலத்திற்கான முடிவிற்கு வர வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்ன தான் பண்ணும்?
செவ்வாய் தோஷம் லக்னத்திற்கு எந்த இடத்தில் அமைகிறது மற்றும் அது சேர்ந்திருக்கும் கிரகங்கள், அது இருக்கும் வீட்டின் உச்ச, ஆட்சி, நீச்ச, பகை வீடுகளைப் பொருத்தே இந்த செவ்வாய் தோஷம் என்ன பண்ணும்  என்பதை அறுதியிட்டு கூற முடியும்.  ஒவ்வொரு ஜாதகத்திற்கும் கிரக சேர்க்கைகளும் அதனால் ஏற்படுகின்ற கூட்டு பலன்களும் மாறும். பொதுவாக சொல்லனும்னா இந்த செவ்வாய் தோஷம் என்பது ஒரு திருமண பந்தத்திற்கு முக்கியமான தாம்பத்திய உறவின் பலத்தை தீர்மானிக்கிறது. தாம்பத்திய உறவின் விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்கிறது என்றும் கூட சொல்லலாம். அதவாவது கணவனிற்கு செக்ஸில் அதிக ஈடுபாடு இருக்கும் மனைவிக்கு அவ்வளவா விருப்பமே இருக்காது அல்லது மனைவிக்கு அதிக விருப்பம் இருக்கும் ஆனால் கணவனுக்கு இருக்காது. இப்படி வெவ்வேறு தாம்பத்திய பலமுள்ள ஆணும் பெண்ணும் சேரும் போது அந்த திருமணப் பந்தம் முறிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. ஜோதிடத்தில் எல்லாமே சூட்சகமாகத்தான் சொல்லப் பட்டிருக்கும்ன்னு நான் அடிக்கடி சொல்வதுண்டு. உதாரணத்திற்கு, ஒரு ஆணிடமோ பெண்ணிடமோ உனக்கு செக்ஸ்ல எவ்வளவு விருப்பமிருக்கு என்பதை நேரிடையாக சமுதாயத்தில் கேட்க முடியுமா? இந்த மாதிரியான அந்தரங்க விஷயங்களை கூட தெரிந்து கொண்டு திருமணப் பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பதினுடைய சாராம்சமாகத் தான் இந்த செவ்வாய் தோஷம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பல மூட விஷயங்களும் இதனுடன் சேர்ந்து கொண்டு மக்களைப் பாடாய்படுத்துகிறது. இன்றைய காலக்கட்டங்களில் நாம் தினமும் செய்தி தாள்களில் பார்ப்பது காமத்தினால் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள் ஏராளம். பெரும்பாலான திருமண உறவுகள் இன்று முறிந்து போவதற்கு இந்த தாம்பத்திய உறவின் தோல்வி ஒரு முக்கிய காரணமாக இருந்திருப்பதை நாம் நன்றாக உணர்ந்தே இருக்கின்றோம். திருமண உறவிற்கு இனிமை சேர்க்கும் இந்த தாம்பத்திய உறவு தோல்வியில் முடிந்தால் நிச்சயம் அந்த திருமணமும் தோல்வியில் தான் முடியும் என்பதிற்கு யாரிடமும் மாற்று கருத்து இருக்க முடியாது. செக்ஸ்ல சம பலமிருக்கிற ஆணையும் பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் அந்த திருமணம் வெற்றி பெறும். அதனால் தான் செவ்வாய் தோஷமுள்ள ஒரு ஆணிற்கு செவ்வாய் தோஷமிருக்கிற பெண்ணை கட்டி வைக்க வேண்டுமென்கிற கருத்து சரியாகவேப்படுகிறது. அப்போது தான் அந்த ஆணிற்கு அந்த பெண் தாம்பத்தியத்தில் ஈடு கொடுக்க முடியும். என்னடா இது திருமணம்னாலே தாம்பத்தியம் மட்டும் தானா என்று நினைக்க கூடாது. திருமண வாழ்வில் தாம்பத்தியம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.  அதனால் தான் மேலே சொன்ன கருத்திற்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையாமலும் ஜாதகத்தில் செவ்வாயும் பலமிழந்து இருந்தால் அப்போது தான் அந்த ஜாதகம் தன்னுடைய துணைவருக்கு தீங்கு செய்ய ஆரம்பிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் நீச்சமடைவது, செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பது, செவ்வாய் சூரியனுடன் சேர்ந்திருப்பது, செவ்வாய் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருப்பது, சுபரின் பார்வை பெறமாலிருப்பது பகை வீட்டிலிருப்பது போன்றவைகள் தான் அந்த ஜாதகரின் துணைவருக்கு நோய்வாய்படுதல், நீண்டகால நோய் தொந்தரவு, கருத்து வேறுபாடு, திருமண உறவு கசந்து போகுதல், விவாகரத்து, வழக்கு வியாஜ்ஜியம், விபத்து, குடும்ப சண்டை, தாம்பத்திய சுகமில்லாமை, உறவினர் பகை, சகோதர சகோதரி சண்டை என தீங்கின் பட்டியல்நீண்டு கொண்டே போகிறது. மேற்சொன்ன தீய பலன்கள் எல்லாம் செறும் தோஷத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றும் கொள்ளக் கூடாது. இவையும் கிரகங்களின் இருப்பிடம், சேர்கை மற்றும் பார்வை பலங்களைப் பொருத்தே கூட்டுப் பலன்கள் அமைகிறது. செவ்வாய் தோஷத்தை விட கடுமையான தோஷங்கள் எல்லாம் உள்ளன. உதாரணத்திற்கு சுக்கிர தோஷம். இது  தான் மிகக் கடுமையான தோஷமாக எனக்கு படுகிறது. இது மிச்ச தோஷங்களையெல்லாம் விட இதனால் ஏற்படுகிற பாதிப்பு கொஞ்சம் கடுமையாகவே இருக்கும்.

எதெல்லாம் செவ்வாய் தோஷம் இல்லை?
உண்மையில் நம்ம ஜோதிட நூல்கள் எல்லாமே எதெல்லாம் செவ்வாய் தோஷம் இல்லை என்று ஒரு பட்டியலையயே போட்டு வைத்துள்ளார்கள். அநத வகையில் சில விதிவிலக்குகளைப் பார்ப்போம். ஒரு ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,7,8,12 வீடுகளில் செவ்வாய் இருந்தாலும்
செவ்வாய் அதன் உச்ச வீடான மகரத்தில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் சிம்மம், மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் சுபருடனோ (அ) சுபர் வீட்டிலோ இருந்தால் தோஷமில்லை.
செவ்வாய் குருவுடனோ (அ) சந்திரனோடோ சேர்ந்திருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் ராசியில் பலமிழந்திருந்தாலும் அம்சத்தில் பலம் பெற்றிருந்தால் கூட அது தோஷமில்லை.
செவ்வாய் சுக்கிரனோட வீட்டிலிருந்தாலும் தோஷமில்லை.

இந்த மாதிரி சுமார் 14 வகையான விதிவிலக்குகளை நம் முன்னோர்கள் கூறி விட்டு சென்றுள்ளனர். இப்படி பார்த்தால் பெரும்பாலான ஜாதகங்கள் செவ்வாய் தோஷ நிவர்த்தி அடைந்து விடுகின்றன. ஆனால் இதை பொதுவாக மக்கள் தெரிந்து கொள்வதே இல்லை. இவ்வாறு ஒரு செவ்வாய தோஷ நிவர்த்தி பெற்ற ஜாதகத்தை கண்டு அச்சம் கொள்ள தேவையேயில்லை. இதனால் தோஷ நிவர்த்தி அடைந்த ஜாதகத்தையும், தோஷமுள்ள ஜாதகத்தையும் கூட சேர்த்து திருமணம் செய்து வைக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. ஆனால் எந்த வகையிலும் தோஷ நிவர்த்தி அடையாத ஜாதகத்தையும் தோஷமுள்ள ஜாதகத்தையும் சேர்க்கும் போது நிச்சயம் எதிர்மறையான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

பரிகாரங்கள்
உலகில் உள்ள எல்லா வழிகளுக்கும் ஒரு மாற்று வழிகள் உண்டு. அதுபோலத் தான் இந்த தோஷங்களுக்கான மாற்று வழிகள் தான் இந்த பரிகாரகங்கள். மனிதர்கள் தவறு செய்வதென்பது அவர்களின் கருமத்தின் பலனாக நடப்பது. எனவே தெய்வங்களை வழிப்பட இந்த பாவக் கர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபட முடியும். செவ்வாயின் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பிரதான ஸ்தலம் அனைவரும் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில். ஒரு செவ்வாய்க் கிழமை இங்குள்ள தீர்த்தத்தில் முழ்கி அங்கு எழுந்தருளியிருக்கும் வைத்தியநாத ஸ்வாமியையும் தையல் நாயகியையும் முறையாக நாம அர்ச்சனை செய்து மனமுருகி வழிப்பட்டு, மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, பின்னர் அங்கு எழுந்தருளியிருக்கும் செவ்வாய் பகவானையும், முருகரையும் முறையாக தீபமேற்றி மனமுருகி வழிப்பட்டு அங்கேயே முடிந்த அளவு அன்னதானம் வழங்க அனைத்துவிதமான செவ்வாய் தோஷங்களின் தீய பலன்களின் தாக்கங்களும் குறைந்து அல்லது விலகி ஓடுவதை நாம் நன்றாக உணர முடியும். இந்த ஸ்தலம் மேலும் பல தீராத வியாதிகளையும் போக்கும் ஸ்தலமாக பல ஆயிரமாண்டுகளாக மக்களை காத்துவருகின்றது.

கருத்து.
முடிவாக சொல்லவதென்றால் செவ்வாய் தோஷமென்பது ஆராயப்பட்டு கருத்தில் கொள்ள வேண்டுமென்பதே தவிர அச்சப்பட வேண்டிய ஒன்று அல்ல.

புதன், 5 ஜனவரி, 2011

கன்னிப் பதிவு


"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."


பிள்ளையார் அப்பனை வணங்காமல் எந்த ஒரு காரியமும் நான் பொதுவாக தொடங்குவதில்லை. பிள்ளையாரைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்களுன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய யானை முகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே பிடிக்கும். பொதுவாக யானையை நாம கோவில்லப் பார்த்தாலே நம்மை அறியாமல் நமக்குள்ளே ஒரு சந்தோஷம் ஏற்படுவதை நன்கு உணர முடியும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அடையாளமாக யானையின் முகம் பிரதிபலிப்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைக்கு வலைப்  பூக்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது. தினமும் ஒரு வலை பதிவர் வந்து கொண்டே இருக்க தான் செய்கின்றனர். இதோ அந்த வரிசையில் நானும் ஒரு உதயம். இதோ இன்னொருத்தன் எழுத வந்துட்டான்யா... இது தான் எல்லோரும் சொல்ல போற கமெண்ட்ஸ். எப்படி இருந்தா என்ன? இன்றைக்கு கோடிகணக்கில் மக்கள் தொகை இருக்கு. ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பிறந்துகிட்டு தான் இருக்கு. இருந்தாலும் தனக்குன்னு முதல் குழந்தை பிறக்கும் போது ஏற்படுகிற அந்த எதிர்பார்ப்பும் சந்தோஷமும் ஒரு தனி சுகம் தான். அந்த வகையான ஒரு தனி சுகம் தான் எனக்கும். மற்றவர்களின் பார்வைக்கு இது உலகத்துக்கு இன்னொரு குழந்தை, ஆனால் எனக்கு இது முதல் குழந்தை.  இந்த வலைப் பதிவின் நோக்கமே ஜோதிட சம்பந்தமான எல்லா தேடல்களுக்கும் முடிந்த அளவு விடை காணும் ஒரு முயற்சி.

இந்த கன்னிப் பதிவு பதியும் இந்த நாள் ஒரு நல்ல புதன் கிழமை ஆகும். ஜோதிடத்திற்கும் புதனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஆம் ஒரு ஜனன ஜாதகத்தில் புதனின் வலிமையைப் பொருத்தே ஒருவருக்கு ஜோதிட அறிவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கூற முடியும். இனி வரும் பதிவுகளில் நாம் ஜோதிட சம்பந்தமான நிறைய விஷயங்களைப் பற்றி அலசுவோம்.

பூக்கள் மலரும்.....