கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

அஷ்டமத்து சனி

         நம்ம எல்லாரும் ஏழரை சனி ஏழரை சனின்னு அடிக்கடி சொல்லுவோம். யாருக்காவது கெட்டது நடந்துச்சிருச்சின்னா உடனே அவனுக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிடுச்சின்னு சொல்லுவோம். அதெல்லாம் அடிக்கடி நாம
கேட்கறதுதான். பொதுவாக ஏழரை சனி படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோச்சாரத்தில் 12, 1, மற்றும் 2 இடங்களுக்கு வருவது தான் ஏழரை சனி என்று அர்த்தம். அதாவது 12ஆம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள், ஜென்ம ராசியில் இரண்டு அரை ஆண்டுகள் மற்றும் 2ம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள் என்று மொத்தம் 7 1/2 ஆண்டுகள் என்று மெதுவாக நகர்ந்து சனி பகவான் நமக்கு பலன்களை தருகின்றார்.
அவர் மிக மெதுவாக நகர்வதால் நமது வாழ்வில் அவர் தரும் பலன்கள் நாம் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நின்று விடுகிறது. இந்த ஆண்டுகளில் அவரவர் அனுபவிக்கும் பலன்கள் மனிதன் சாகும் வரையில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும். பலன்கள் என்பது மாறுபடலாம் அவரவர் பூர்வ புண்ணிய பாவங்களைப் பொறுத்து அவரவர் இந்த காலக் கட்டங்களில் நற்பலன்ளையோ அல்லது கெடு பலன்களையோ அனுபவிப்பார்கள் என்பது நிதர்சனம். பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த ஏழரை சனி காலத்தில் கெடு பலன்களே நடக்கின்றன. மாறாக சிலருக்கு அவர்கள் ஆச்சரிய படுகின்ற அளவுக்கு நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் இளமை காலங்களில் வரும் எழரை சனியில் தான் நிறைய பேருக்கு திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. நல்ல சந்தோஷமான வாழ்க்கை என்று அனுபவிப்பார்கள். இது எப்படி சாத்தியம் அவர்களுக்கு மட்டும் ஏன் கெடு பலன்கள் நடக்க வில்லை என்று அவர்களை பார்க்கும் மற்றவர்கள் ஆச்சரியபடுவதும் உண்டு. ஆம் அவர்களுக்கு முதல் சுற்று (அ) இரண்டாவது சுற்று (அ) மூன்றாவது சுற்று இதிலே எந்த சுற்று நடக்கிறது என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். முதல் சுற்றாக இருந்தால் பெரும்பாலும் கெடு பலன்கள் தான் நடக்கும். இதற்கு மங்கு சனி என்று பெயர். இரண்டாவது சுற்றிற்கு பொங்கு சனி என்று பெயர். இது பெரும்பாலும் வாழ்க்கையில் நல்ல பலன்களை தான் தரும். மரண சனி இது கடைசியாக ஆண்டு அனுபவித்த பிறகு வருவது. பெரும்பாலும் ஞானம் மற்றும் மோட்சம் சம்பந்தபட்ட பலன்களை வழங்குவார் சனி பகவான். இவையனைத்தும் பொதுவான ஏழரை சனி பலன்கள். ஆனால் உண்மையில் அவரவர் பிறந்த ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும். ஏனெனில் அந்த ஜாதகருக்கு சனி பகவான் எந்த இடத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறார் மற்றும் ஜென்ம லக்னம் மற்றும் ராசிக்கு சனி பகவான் சுபரா அல்லது பாவியா என்பதை பொறுத்து தான் பலன்கள் மாறுபடும். சரி ஏழரை சனியிலுல தான் எனக்கு கல்யாணம் ஆச்சி அதுல தான் நான் வீடு வாங்கினேன் அதுல தான் நான் நிறைய சம்பாதிச்சேன் என்று சொல்றவங்களையும் நான் நிறைய பார்த்து இருக்கிறேன். உண்மையில் அது மேற்சொன்ன ஜென்ம ஜாதகத்தை பொறுத்தும் அந்த காலங்களில் நடக்கும் திசா புக்தியை பொறுத்தும் தான் நடக்கின்றது. தற்போது சனி பகவான் உச்ச வீட்டில் இருக்கின்றார். நான் ஏற்கனவே ஊழலுக்கு தண்டனை யார் கொடுப்பார்கள் என்ற பதிவில் எழுதியிருந்தேன். அதுபோல தற்போது லாலு பிரசாத் யாதவிற்கு 15 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது. மேலும் ஒரு எம்.பி. தண்டிக்கப்பட்டிருக்கிறார். இவை எல்லாம் இந்திய அரசியல் சரித்திரத்தில் புதிய பதிவுகள் தான். பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ஒரு ஆண்டிற்குள் எத்தனை பேர்கள் தண்டிக்கப்பட போகிறார்கள் என்று?



            சரி தலைப்பிற்கு வருவோம். அது என்ன அஷ்டமத்து சனி?
சனி பகவான் கோச்சாரத்தில் ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருவது தான் அஷ்டமத்து சனி. இந்த கால கட்டத்தில் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. ஏழரை சனியில் கஷ்டங்களை அனுபவிக்காதவர்கள் கூட இந்த காலத்தில் கடுமையான கெடு பலன்களை அனுபவிப்பார்கள். அதற்கு காரணம் சனி பகவான் எட்டாமிடத்திற்கு வரும் போது சனி பகவானின் பார்வை 10, 2 மற்றும் 5 ம் வீடுகளின் மீது பதிகின்றன. அதன்படி அஷ்டமத்து சனி காலத்தில் சனி பகவானின் 3ம் பார்வையாக முதலில் 10ம் இடமான தொழில் உத்தியோக ஸ்தானத்தில் விழுவதால், முதலில் ஜாதகரின் வேலையையோ அல்லது தொழிலையோ காலி பண்ணி விடும். ஏதாவது ஒரு வகையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும். முதலில் வேலையை காலி பண்ணி விட்டாலே ஒரு மனிதன் நடைபிணமாக மாறிவிடுவான். உத்யோகம் புருஷ லட்சணம் அல்லவா! அது வரையில் நன்றாக தொழிலிலோ அல்லது உத்தியோகத்திலோ கொடி கட்டி பறந்த அவன் சற்றும் எதிர்பாராத அற்ப காரணங்களுக்காக அவனது கர்மத்தினை அவன் விட்டுவிட்டு ஒன்றும் செய்யாமல் சுத்தி வருவான். அல்லது ஒரு கர்மமும் அமையாமல் வெறும் அலைச்சலையே சந்திப்பான். அடுத்து கர்மம் இல்லாவிட்டால் காசு இல்லை. அவனக்கு சம்பாத்தியம் என்பதே இல்லாமல் போய்விடும்.
ஆம் அது தான் சனி பகவானின் 7ம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 2ம் இடத்தில் விழும். அது வாக்கு, குடும்பம், தனம் ஸ்தானத்தில் விழுவதால் ஜாதகரின் தனத்திற்கு வேட்டு வைத்து விடும். அடுத்து வாக்கிற்கும், குடும்பத்திற்கும் வேட்டு வைத்து விடும். அதாவது உத்தியோகம் போய்விடும். பாடுபட்டு ஈட்டிய செல்வம் எல்லாம் போய்விடும். அதுவரையில் இனிமையா இருந்த மனைவியோடு சண்டையிட்டு கொண்டு குடும்பத்திற்கே வேட்டு வைத்து விடும். வழக்கு கோர்ட் கேஸ் என்று அலைய விடும். சந்திப்பர்வகள் எல்லாரும் ஏமாற்றுகாரர்களாக இருப்பார்கள். பணத்தினை வாங்கி விட்டு வாங்கிய கடனை திருப்பி தரமாட்டார்கள். போதாத குறைக்கு நீங்களும் கை நீட்டி கடன் வாங்க வேண்டும். நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்து விட வைக்கும். பணத்திற்காக எந்த முதலீடு செய்தாலும் அது கடுமையான தான் நஷ்டத்தில் முடியும். எழுந்து விடலாம் என்று எழுந்திருப்பீர்கள் ஆனால் ஏறியது ஒரு படி என்றால் இறங்கியது எட்டு படியாக தான் இருக்கும். அந்த அளவிற்கு இரண்டாம் வீட்டின் பதியும் பார்வை கொடிய பலன்களை வழங்கும். சரி அடுத்து ஒரு பார்வை இருக்கிறது சனி பகவானிற்கு. ஆம் 10ம் பார்வையாக 5ம் இடத்தினை பார்க்கிறார். அது பூர்வ புண்ணிய ஸ்தானம். அதாவது போன ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தற்போது தண்டனை வழங்கும் நேரம் இது.
மீளவே முடியாத அளவிற்கு கடுமையான தண்டனைகள் எல்லாம் வழங்கபடும். சிறைவாசம் முதல் மனச்சிறை வரை என்ற வகை வகையாக தண்டனைகளை செய்த பாவத்திற்கேற்றாற்போல் வழங்குவார். ஆக உண்மையான தண்டனை காலம் என்பதே இந்த அஷ்டமத்து சனி காலம் தான்.
இதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம். வாழ்க்கையில் இந்த காலத்தினை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி. இதிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காரியம் என்றாலும் அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை பதிந்தால் மட்டும் தான் ஓரளவிற்கு அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் எனலாம் இருந்தாலும் முழுமையாக விலகாது என்பதே நிதர்சனம். அந்த அளவிற்கு அஷ்டமத்து சனி படுத்தும் என்றால் அது மிகையில்லை. முதல்ல கஷ்டத்தை அனுபவிக்கும் போது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், அப்புறம்?  அப்புறம் என்ன அப்புறம்? அதுவே பழகிடும். என்னங்க கும்கி பட வசனம் மாறி இருக்கேன்னு யோசிக்கீறிங்களா? அட ஆமாம்ங்க அஷ்டமத்து சனியும் நீங்க உங்க கஷ்டத்தை ஏத்துக்கிற வரைக்கும் விடாதுங்க.

         இதற்கு பரிகாரம் என்பதே முடிந்த வரை வந்த கஷ்டத்தை அனுபவிப்பது தான். முடிந்த வரை சனி பகவானை பழிக்காமல் சனிக்கிழமை பிடித்த தெய்வங்களையும், சனி பகவானையும் வணங்கி வாருங்கள். முடிந்தால் திருநாள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் முழ்கி தர்ப்பாரண்யேஸ்வரரையும் பிராணாம்பிகையும் வணங்கி விமோசனம் பெறலாம்.

          நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதப்பட்ட பதிவு இது. காரணம் இதே அஷ்டமத்து சனி தான் எனக்கும். மீதம் எதையும் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.
       
          ஜோதிடப் பூக்கள் மீண்டும் மலர காரணமான எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன்.