கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அவள் வீசி சென்ற பார்வை




தலைப்பைப் பார்த்துவிட்டு 'ஜோதிடம்' எழுதறதை விட்டுவிட்டு 'கவிதை' எழுதப் போயிட்டேன்னு நினைக்காதீங்க.
"கன்னியின் கடைக்கண் பார்வைப் பட்டு விட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் மடுவாம்" என்றான் பாவேந்தன்.
பார்வைக்கு இத்தனை சக்தி உண்டோ என்று நீங்கள் வியந்தீர்களானால், நீங்கள் இன்னும் எந்த மச்சக் கன்னியாலும் வீழ்த்தப் படவில்லை என்றே பொருள். ( ஐய்யோ பாவம்!).

எனக்கு தெரிந்த ஒரு 'நண்பர்' எங்க ஏரியாவுல ஒரு டைலர் கடையில் வேலைப் பார்த்து வந்தார். அந்த ஏரியாவில் போற வரவங்களை எப்பவும் பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டு இருப்பார். அப்படி ஒரு நாள் அந்த பக்கமா அந்த ஏரியாவிலுள்ள (சொல்லணும்னா 2, 3 தெரு தள்ளியிருக்கிற வீட்டிலிருந்து ) ஒரு 'சுமாரான அழகிய பெண்' ஏதேச்சையா அந்த பையனை தெரியத்தனமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டாள். அவனுக்கு அன்றிலிருந்து பிடித்துவிட்டது 'பித்து'. 'ஆம்'. 'அவள்' என்னை தான் பார்த்தாள். 'நான்' அந்த பொன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கூறிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு எப்பப் பார்த்தாலும் அவள் வீட்டை சுற்றி சுற்றி வந்துக் கொண்டேயிருக்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் இவனது செய்கை அந்த பொன்னுக்கும் தெரிய வந்தது. இந்த பையன் தன்னை தான் பார்க்க வருகிறான் என்பதை அறிந்து கொண்டாள். அதை அவள் உள்ளுக்குள்ளே ரசித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.(பெரும்பான்மையான பெண்களுக்கு ஒரு பையன் தன் பின்னாடி சுத்தறது, உள்ளுக்குள்ள பெருமையான விஷயமாக இருந்தாலும் அதை அவங்க வெளியில காட்டிக்கிறது இல்லை). அதே நிலை தான் இந்த பையனுக்கும். நான் அந்த பையனை சந்திக்கும் போதே அவன் இரண்டு ஆண்டுகளாக இந்த பணியை தன் தலையாய கடமையாக செய்து வருகிறான் என்பதை தெரிந்து கொண்டேன்.  அதற்கு பிறகு அவன் அந்த பெண்ணின் அப்பாவிடம் அடிவாங்கியது, அதன் பின்னர் அவன் 'பித்து' தெளிய எல்லாம் சுமாரா 4 வருடத்திற்கு மேல் ஓடிடிச்சிங்க. இதெல்லாம் எதனால் வந்தது, அவள் வீசி சென்ற ஒரே 'ஒரு பார்வையால்' வந்தது. அந்த பார்வையால் தான் அவன் 4 வருடங்கள் அவள் பின்னால் நாயாக சுற்றினான். அதாங்க கன்னியின் பார்வைக்கு உள்ள வலிமை. இந்த மாதிரி "ஒரு பார்வையால் வீழ்ந்தவங்களும் இருக்காங்க, நல்லா வாழ்ந்தவங்களும் இருக்காங்க".

நான் சொல்ற இந்த கதையெல்லாம் சுமார் நடந்து 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இப்ப எல்லாம் யார் இந்த மாதிரியெல்லாம் இருக்காங்க. இப்ப இருக்கிற டிரெண்டே வேற. சரி விஷயத்திற்கு வருவோம். சாதாரண ஒரு கன்னியின் பார்வைக்கே இந்த அளவுக்கு பவர் இருக்குன்னா, மகா வலிமையும், சக்தியும் படைத்த கிரகங்களின் பார்வைகள் மட்டும் சளைத்தவையா என்ன?

கிரகங்களின் பார்வை

ஒவ்வொரு கிரகங்கத்திருக்கும் பார்வைகள் உண்டு. பார்க்கும் பார்வையினாலே கிரகங்கள் நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும்.
பொதுவாக எல்லாக் கிரகங்களுக்கும் 'ஏழாம் பார்வை' என்பது உண்டு. அதாவது தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது இடத்தை பார்வையிடுவார்கள். இது போக 'சிறப்புப் பார்வைகளும்' உண்டு.
குருவுக்கு 7ம் பார்வை தவிர 5ம் பார்வை மற்றும் 9ம் பார்வைகள் உண்டு.
அதே போல் செவ்வாய்க்கு 4ம் பார்வை ­மற்றும் 8ம் பார்வைகள் உண்டு.
சனிக்கு 3ம் பார்வை மற்றும் 10ம் பார்வை உண்டு.
ஆக குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் தான் 'சிறப்பு பார்வை' உண்டு. மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது.
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது.

சனிக்கு ஸ்தான பலம் உண்டு. ஆனால், பார்வை பலம் உடைய கிரகம் என்றால் அது குரு தான். "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பது ஜோதிடம் அறியாதவர்கள் வாயில் இருந்து கூட வருவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். "சனியின் பார்வை மிகக் கொடியது" என்றே எல்லா நூல்களும் குறிப்பிட்டுள்ளன. இருந்தாலும் சனியானவர் அந்த ஜாதகத்திற்கு 'சுபரா' அல்லது 'பாவரா' என்று பார்க்க வேண்டும். சனி சுபராகின், சனியின் பார்வை கூட நன்மை செய்யக் கூடியது தான்.

பொதுவாக சனி தான் பார்க்கும் இடத்தை கெடுக்க கூடியதாகும். ஆனால் எந்தவொரு கிரகமும் தன் சொந்த வீட்டைப் பார்த்தால் அது நன்மை பயக்குவதாகவே அமையும். தீய கிரகங்களின் சேர்க்கை இருந்து, அது மிகுந்த தீமை பயக்குவதாக இருக்குமேயானால், அதனை சுபக் கிரகங்களின் 'பார்வை' அந்த தீய பலனை குறைக்கும் சக்தி உடையதாகும்.

"கிரகங்களின் பார்வை பலம் வாழவும் வைக்கும், வீழவும் வைக்கும்."

இந்த கிரகங்களின் பார்வைப் பற்றி பலர் அறிந்து வைத்திருந்தாலும், என் வலைப் பதிவில் இதனை பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

சூரியனை மேற்கில் உதிக்க சொல்லி ஆணை !


எல்லோருக்கும் இனிய "கர" வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




மலர போகிற அம்மா ஆட்சியில் நிச்சயம் சித்திரை முதல் நாளையே மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணை வரும் என் மனம் ரொம்ப எதிர்பார்க்கிறது. இதை நான் சொல்றதால நான் 'அதிமுக' காரன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த நடுநிலையாளர்கள் அப்படின்னு சொல்றாங்களே அதுல நானும் ஒருத்தன்பா...

தமிழ் புத்தாண்டை ஏன் 'சித்திரை முதல் தேதி' கொண்டாடுறாங்க என்பதற்கு வலையுலகில் நிறைய பேர் ஆராய்ச்சி கட்டுரையையே எழுதியிருக்காங்கன்னா பார்த்துங்க....

ஒவ்வொரு ராசியிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை தான் நம் முன்னோர்கள் இன்னும் எளிதாக்கி 'மாதங்கள்' எனப் பெயரிட்டு நடைமுறை வழக்கத்தில் கொண்டு வந்திருந்தனர். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் 'சித்திரை' மாதமாகும். அதே போல பன்னிரெண்டு ராசிகளில் சஞ்சரிப்பதையே 12 தமிழ் மாதங்களாக வகுத்திருந்தனர்.

இது எத்தனை ஆயிரம் ஆயிரமாண்டுகளா நடந்து கொண்டிருக்கின்றன. எனது பிரம்மாவின் வயது என்ற பதிவினை படித்தவர்களுக்கு நன்றாக புரியும். காலம் யாருக்காகவும் நிற்க போவதில்லை. யாரேனும் பூமியின் சுழற்சியை சற்று நேரம் நிறுத்தி வைக்க முடியுமா?

மேஷ ராசியில் பிரவேசிக்கும் முதல் நாளை தான் ஒரு ஆண்டின் துவக்கமாக நம் முன்னோர்கள் வகுத்து உள்ளனர். அதாவது ஒரு வட்டத்திற்கு 360 பாகை உள்ளது. இதில் 0 பாகையை தான் தொடக்க புள்ளியாக கொள்கிறோம். அதற்கு மாறாக நாம் யாரேனும் 270 வது பாகையை தொடக்கப் புள்ளியாக கொள்கிறாமா என்ன? அதை தான் பின்பற்ற சொல்லி அரசாணை இயற்றி நடைமுறையும் படுத்திவிட்டனர், அதாவது 270 பாகையை தொடக்கப் புளளியாக கொள்ளுங்கள் என்று ஆணை.

ஆமாங்க. 'தை மாதம்' என்பது 270 லிருந்து 300 பாகையில் சூரியன் இருக்கும் காலம். 'சித்திரை' என்பது 0 முதல் 30 பாகையாகும். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் இப்படி மாற்றியமைப்பது சரி தானா என்று?

என்னுடைய நீண்ட நாள் சிறு ஆதங்கத்தையும் இப்ப பதிவு செய்திட்டேன். மனதிற்கு ஓரளவு நிம்மதியாய் இருக்கிறது.

கணக்கை திருத்தி எழுதி எழுதி ஊழல்ளை செய்ற பழக்க தோஷத்தில், இதிலும் திருத்தி எழுதிட்டாங்களோ என்னவோ?

ஆட்சியும் அதிகாரமும் இருந்துட்டா உண்மையிலேயே இவங்க சூரியனைக் கூட மேற்கில் உதிக்க சொல்லி அரசாணை இயற்றிடுவாங்கப்பா!

வியாழன், 7 ஏப்ரல், 2011

60 மணி நேரம் கடிகாரத்தில் இல்லையே?




நம் முன்னோர்கள் வகுத்து வைத்த கணித முறைகளைகளின் ஆழத்தை அறிய அறிய நமக்கு ஒரு பிரமிப்பே உருவாகி விடும். அந்த அளவிற்கு நம் முன்னோர்களின் அறிவு திறனை நாம் போற்றிட வேண்டும்.

இன்று நாம் கடைபிடிக்கும் கால அளவு முறைகள் எல்லாம் நம்மால் என்றோ வகுக்கப் பட்டுவிட்டன.


60விநாடி என்பது 1 நாழிகை

60 நாழிகை என்பது 1 நாள்

2 1/2 நாழிகை என்பது 1ஓரை

2 1/2 நாழிகை என்பது 1 ஓரை

3 1/2 நாழிகை என்பது 1முகூர்த்தம்

2 முகூர்த்தம் என்பது 1 சாமம்

4 சாமம் என்பது 1 பொழுது

2 பொழுது என்பது 1 நாள்

15 நாள் என்பது 1 பட்சம்

2 பட்சம் என்பது 1 மாதம்

6 மாதம் என்பது 1 அயனம்

2 அயனம் என்பது 1 வருடம்

60 வருடம் என்பது 1 வட்டம்

120 வருடம் என்பது 1 மனித ஆயுள் வட்டம்


நம் முன்னோர்களின் கணித கால முறைகள் எல்லாம் 60 என்ற எண்ணை மையமாக் கொண்டு பிரிதிருப்பார்கள்.

ஆனால் இன்று நாம் ஒன்றும் ஒரு நாளைக்கு 60 மணி நேரம் என்று கடிகாரத்தினை அமைத்திருக்க வில்லையே?

இதோ அதற்கான விளக்கம்.
2 1/2 நாழிகை என்பது ஒர ஓரையாகும். அதாவது 60 நாழிகை என்கிற ஒரு நாளுக்கு 24 ஓரைகள் வருகின்றன. இந்த 24 மணி நேரம் என்ற கணக்கு எப்படி வந்தது என்று தற்போது உங்களுக்கு புரிகிறதா?

ஒரு மனிதனின் முழுமையான ஆயுள் வட்ட வாழ்வில் ஒன்பது கிரகங்களும் ஒன்பது திசைகளா வந்து மனிதனின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணத்திற்கு சூரிய திசை என்று கொண்டோமானால் 6 வருடங்கள். இந்த 6 வருடங்களும் சூரியன் மட்டுமே மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. இந்த 6 வருடத்தினை மீண்டும் அதே ஒன்பது கிரகங்கள் பங்கிட்டு கொண்டு ஒன்பது புத்திகள் ஒரே திசாவில் வருகின்றன. அதாவது ஒரு திசையில் ஒன்பது புத்திகள். அதே போன்று ஒரு புத்தியினை மீண்டும் ஒன்பது கிரகங்கள் பகிர்ந்து கொண்டு ஒன்பது அந்தரங்களாக வருகின்றன. அதாவது ஒரு புத்திக்குள் ஒன்பது அந்தரங்கள். இந்த அந்தரங்கள் பெரும்பாலும் மாதங்கள் அல்லது நாட்களிலேயே தான் வரும். இந்த நாட்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற ஏழு கிரகங்கள் பகிர்ந்து கொண்டு அந்த அந்தரத்தை வழி நடத்தும். ராகுவுக்கும், கேதுவுக்கும் கிழமைகள் கிடையாது. எனவே அவை இரண்டிற்கும் ராகு காலம், எமக் கண்டம் என்று எல்லா நாட்களிலும் பிரித்துக் கொடுத்து ஆதிக்கம் செலுத்த உரிமை கொடுக்கப் பட்டிருக்கிறது.

அப்படியே பார்ப்போமானால், எப்படி ஒரு திசாவினை ஒரே ஒரு கோள் மட்டுமே ஆட்சி செலுத்தவிடாமல் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனவோ அதேப் போன்று ஒரு நாளினையும் அந்த நாளுக்குரிய கிரகம் முழுமையாக ஆட்சி செய்துவிட முடியாது.
அவைகளும் ஏழு கிரகங்களால் பகிர்ந்து கொள்ளப் பட்டு அதாவது ஓரைகளாகப் பகுக்கப் பட்டு அந்தந்த கிரகங்களால் ஆட்சி செய்யப் படுகின்றன.
இன்று எந்த கிழமையோ அந்த நாளுக்குரிய கிரகத்திலிருந்து தான் அந்த ஓரை ஆரம்பிக்கும்.

உதாரணமாக இன்று ஞாயிற்றுக் கிழமை என்றால் காலை சூரிய உதயத்திலிருந்து 2 1/2 நாழிகை சூரிய ஓரை இருக்கும். பிறகு அடுத்த 2 1/2 நாழிகைக்கு சுக்கிர ஓரை இருக்கும். இதே போல அடுத்து புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஓரைகள் தொடர்ந்து வரும். செவ்வாய் ஓரை முடிந்த பிறகு மீண்டும் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என இதே வரிசையில் ஓரைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

எந்த முகூர்த்தத்தில் எந்த ஓரையினை தேர்ந்தெடுத்து எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று நம் முன்னோர்கள் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வைத்திருந்தனர். அதன்படி தான் பெரும்பாலான நேரங்களில் சுப காரியங்களை இன்றளவும் செய்து வருகின்றனர்.

எல்லாம் இயக்கங்களும் ஏதோ ஒரு அடிப்படையில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையை நாமும் உணரும் போது இறைவனின் படைப்பின் பிரம்மாண்டத்தை நாம் உணருவோமாக.