கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 9 பிப்ரவரி, 2011

பின்யோக ஜாதகம்


     ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வையும் சில கட்டங்களாக நாம் பிரித்து விடலாம். அதாவது நம்ம ரஜினி பாட்ஷா படத்தில வருகிற பாடல் மாதிரி "எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க நினைச்சுக்கோ". ரொம்ப அர்த்தமுள்ள பாடல் தாங்க இது.அது மாதிரி தான் மனித வாழ்க்கையையும் பகுதிகளாக/கட்டங்களாக பிரித்து கொள்ளலாம்.

நம்ம வீட்ல இருக்கிற பெரியவங்களே நம்மகிட்ட சொல்லி நாம கேட்டிருப்போம். "நான் என்னுடைய 25 வயசுல எவ்வளவு கஷ்டபட்டேன்னு உனக்கு தெரியுமா? ஒரு வேளை சோத்துக்கே வழியில்ல... குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விட்டது... ஏழரை சனியில எவ்வளவு கஷ்டபட்டேன்னு உனக்கு தெரியுமா...? இப்படி அவங்க கஷ்டங்களையும் சொல்லி அதற்கு பிறகு இத்தனை வயதிற்கு அப்பறமா தான் நாம தலையெடுத்தோம்ன்னு சொல்லறதை நாம நிறைய கேட்டிருப்போம்". இதிலிருந்து அவங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை கஷ்டத்தை அனுபவித்ததும் பிறகே ஒரு யோகமான வாழ்க்கை வாழ்ந்திருப்பதும் தெள்ள தெளிவாக விளங்கும்.

அது என்னங்க பின்யோக ஜாதகம்? அப்படின்னு கேட்கறீங்களா?
இதை ரொம்ப எளிதாக புரிய வைக்கணும்னா, அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நான் அடிக்கடி சொல்வது எம்.ஜி.ஆர்., வடிவேலு, மற்றும் இயக்குநர் ஷங்கர். என்னங்க இவங்க மட்டும் தானா என்று கேட்காதீங்க. அந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க. இவங்க சினிமா நட்சத்திரங்கள் என்பதால இவங்களைப் பற்றி பெரிதாக உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை. இவங்களெல்லாம் வாழ்க்கையில் தங்களுடைய முதல் பகுதியை வறுமையும், கஷ்டங்களாகவும் தான் கழித்தார்கள் என்று சொல்லலாம். பெரும் போராட்டங்களையும், கஷ்டங்களையும் கடந்து ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் இவர்கள் தங்களுடைய திரைத் துறையில் சாதித்தனர். அது வரை இவர்களிடமிருந்த திறமைக்கு யாரும் தீனிப் போடவில்லை என்பதே உண்மை. சாதிக்க வேண்டுமென்கின்ற வெறி, திறமை, கடின உழைப்பு இவைகளெல்லாம் தான் இவர்களை இந்த உயரமான இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அது உண்மையும் கூட.

என்னதான் திறமை இருந்தாலும் அதுக்கென்று ஒரு அதிர்ஷ்டமிருக்கணும்யா என்று நாம் பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆமாங்க அதைத் தான் நான் இந்த இடத்திலே சொல்ல வந்தது. இவங்க இந்த உயரத்திற்கு வருவதற்கு முன்னாடியும் இவங்களிடத்தில் அதே திறமையும், கடின உழைப்பும் இருந்தது தான். ஆனால் அந்த காலக் கட்டங்களில் அவர்களால் ஏன் ஜொலிக்க முடியவில்லை. ஆம் அது தான் "காலம்" என்கிற அதிர்ஷ்டம். காலத்திற்கு ஏற்ற யோகமான திசா புத்திகள் வரும் போது இவர்களுக்கு அதிர்ஷ்டமும் கைக்கூடி வந்திருக்கிறது. ஏன் இவர்களை விட திறமையானவர்களும் இதே துறையில் இருந்திருக்கலாம்... அவர்கள் வெளியே தெரியாமல் இறந்தும் கூட போயிருக்கலாம். அதற்கு காரணம் "காலம்" என்கிற அதிர்ஷ்டம் அவர்களை தொடாமலே போயிருந்திருக்க கூடும்.

எம்.ஜி.ஆர். முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் போது அவருக்கு வயது 39. இந்த வயதிற்கு பிறகு தான் திரைத்துறையின் உச்சாணி கொம்பிற்கே சென்றார். காலத்தால் அழியாப் புகழ்ப் பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாவற்றையும் தான் விரும்பியவாறு தன்னுடைய பின் வயதில் தான் அனுபவித்தார்.

வடிவேலும், திரை துறையில் சொல்லிக் கொள்ளும் படி நடிக்க ஆரம்பித்ததே அவருடைய 40 வயதிற்கு மேல் தான் எனச் சொல்லலாம். அதன் பிறகே தன்னுடைய வறுமை நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து புதிய வாழ்கையை சகல விதமான வசதிகளுடன் தான் விரும்பியவாறு வாழ ஆரம்பித்தார்.

இயக்குநர் ஷங்கர் தன்னுடைய 30 வயதிற்கு மேல் தான் தனியாக படம் இயக்க ஆரம்பித்தார். அதன் பிறகே திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். இன்று மிக உயரமான இடத்தில் அமர்ந்துள்ளார்.

கண்டிப்பாக இந்த மூவரையும் நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்கவில்லை. இவர்கள் மூவருமே தங்களுடைய வாழ்கையில் முன் வயதில் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தங்களுடைய பின் பாதியில் தான் யோகமான வாழ்க்கையை பெற்றவர்கள்.
அதாவது யோகங்களை பின்னால் அனுபவிக்கும் ஜாதகத்தை தான் பின் யோக ஜாதகம் என்று கூறுவர். பெரும்பாலும் 30 வயதிற்கு மேல், அதாவது சிலருக்கு 32, 36, 40 வயதிற்கு மேல் தான் அவர்களுடைய ஜாதகமே பேசும் எனலாம். அதே போல் ஒருத்தன் நல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் போது "அவனுக்கு சுக்கிர திசை அடிச்சிருச்சி" ன்னு அடிக்கடி சொல்வதை நாம் நிறைய கேட்டிருப்போம். ஆமாங்க அது பின் வயதில் வருகிற சுக்கிர திசைன்னா கண்டிப்பா அது யோகமான தான் இருக்கும்.

பெரும்பாலும் மீன ராசிக்காரர்கள் பின் யோக ஜாதகர்கள் தான். அவர்களுக்கு முன் பகுதி நிறைய சோதனைகள் நிறைந்த வாழ்கையாகத் தான் இருக்கும். ஒரு சில ஜாதகர்கள் இளம் வயதிலேயே யோகங்களை அனுபவிக்கும் அமைப்பினைப் பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பின் வயதில் அவர்கள் கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்திப்பவர்களாக இருப்பார்கள்.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான நற்பலன்களை மட்டுமோ அல்லது தீய பலன்களை மட்டுமோ அனுபவிப்பார்கள் என்று கிடையாது. கிரகங்கள் தங்களின் ஆளுமைகளை மனிதர்களின் மேல் செலுத்துவதைப் பொறுத்து தான் பலன்கள் நிச்சயம் மாறுகின்றன.

பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனால் இன்று பெரும்பாலனாவர்கள் தங்களுடைய வாழ்வினை விட்டில் பூச்சி போல் உடனடியாக எல்லா சுகங்களை அனுபவித்து வாழ்ந்து விடவேண்டும் என்று துடிப்பதை நாம் காண முடிகிறது. அப்படியில்லாமல் பொறுத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கான நேரம் வந்தால் அப்போது உலகமே உங்களுக்காக படைக்கப் பட்டதைப் போன்று உணருவீர்கள். பெரும்பாலான பின்யோக ஜாதகக்காரர்கள் சரித்திரத்தில் நீங்கா புகழொடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் மாற்ற முடியாத உண்மை.

பூக்கள் மலரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.