கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 26 மே, 2011

நான் கண்ட ஜோதிடர்கள்-2


இந்த  மாதம் எனக்கு வேலைப் பளுக் காரணமாகவும், அலுவலகம் மாறிவிட்டக் காரணத்தாலும், என்னால் ஒரு பதிவிற்கு மேல் எழுத முடியவில்லை. இருந்தாலும் எழுத வேண்டும் ஆர்வத்தில் எந்த குறையும் இல்லை.

நான் கண்ட ஜோதிடர்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதவேண்டுமென்று எனக்கு ஆசைத்தான். ஆனால் இந்த பாழாய் போன நேரமின்மை……. இல்லை இல்லை ஏன் இந்த நேரமின்மை மேல் பழியை போடவேண்டும்? ….என்னுடைய திட்டமிடுதலில் ஏற்பட்டுள்ள குறையின் காரணமாக தான் சரியாக எழுதமுடியவில்லை. இருந்தாலும் ஜோதிடப் பூக்களின் நண்பர்களை, வாசகர்களை ஏமாற்றவும், இழக்கவும் எனக்கு மனமில்லை. முடிந்த அளவு சரியாக திட்டமிட்டு இனி எழுதுகிறேன். தொடர்ந்து பதிவுகளை எழுத முடியாமைக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ச்சி……..
சரி அந்த ஜோதிடரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், என் அம்மாவிடம் அடுத்த ஜோதிடரைக் காட்டும்மா, அங்கே போகலாம் என்றேன். அதற்கு என் அம்மா, நான் எந்த ஜோதிடர் வீட்டுக்கு போயும் ஜாதகத்தையெல்லாம் தூக்கிட்டு நின்னது இல்லடா..ஏதாவது நல்ல காரியம் பண்ணணும்னா மட்டும் தான் ஜோசியர்கிட்ட போய், நல்ல நாள் கேட்டு, குறிச்சிட்டு வரதோட சரி என்றார். சரி அம்மா, நாள் குறிச்சி கொடுத்த அந்த ஜோசியர் வீட்டுக்கே என்னையும் அழைச்சிட்டு போம்மா என்றேன்.
சரி வாடா, உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அங்கேயே போகலாம் வா, என்றார். நகரத்தில் உள்ள அந்த ஜோதிடர் வீட்டுக்கு போனோம். அந்த பழைய டவுனில் உள்ள அந்த வீடு, பழைமையை வெளிப்படுத்தியது. மிக குறுகலான சந்து தான் தெரு. இரண்டு வீடுகளுக்கு நடுவில் இடைவெளியேதும் இல்லாமல் வீடுகள் தொடர்ச்சியாக கட்டப்பட்டிருந்தன. இந்த நகரத்தில் பெரும்பாலான பழைய வீடுகள் எல்லாம் இப்படி வரிசையாக கட்டப்பட்டிருப்பதை எங்கு திரும்பினாலும் பார்க்கலாம்.
அவர் ஒரு பிராமணர். பெரும்பாலும் பிராமணர்கள் இந்த ஜோதிட தொழிலில் இருப்பதை நாம் பொதுவாக எங்கும் பார்க்கலாம். இவர் நான் இதற்கு முன்னாடி பார்த்த ஜோதிடர் போல் அல்லாமல், தெளிவானாவர். இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அந்த வீட்டின் மாடி மேல் ஏறி அங்கே காத்திருந்தவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டோம். அவர் பலன் சொல்றது வெளியில உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் நன்றாக கேட்கும் படி சொல்லிக் கொண்டிருந்தார். ஜோதிடம் கேட்க வருபவர்களின் ரகசியத்தை பத்தியெல்லாம் கவலைப்படுபவராக அவர் தெரியவில்லை. சகட்டுமேனிக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் உள்ளே ஜோதிடம் பார்த்துவிட்டு வருபவர்களை, வெளியில் உட்கார்ந்து இருப்பவர்கள், சற்று பரிதாபத்துடனோ அல்லது ஆச்சரியத்துடனோ பார்க்கும் நிகழ்வுகள் என் கண்களில் பட்டன,

என்னடா இது? நாம உள்ளே போயிட்டு வெளியில வரும்போது, நம்மளயும் மத்தவங்க இப்படி தான் பார்ப்பாங்களோ என்று ஒரு சின்ன நெருடலும் வந்தது.

சரி என்னோட முறை வந்தது. நானும் என் அம்மாவுடன் உள்ளே சென்றோம்.
வழக்கம் போல, என்னுடைய ஜாதகத்தை அம்மா, அந்த ஜோதிடரிடம் கொடுத்து, கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவர் எங்களை கொஞ்சம் பொறுங்கள், என்று சொல்லி விட்டு கணக்குப் போட ஆரம்பித்தார். திசாப் புத்தி கணக்குப் போட்டு விட்டு என்னுடைய ஜாதகத்தை தூக்கி மேசையின் மீது போட்டு விட்டு, நேரம் சுத்தமாக நல்லாயில்ல என்று சொன்னார். புதன் திசையில கேது புத்தி எது தொட்டாலும் துலங்காது என்று அழுத்தமாக சொன்னார்.
“நீ இப்ப என்ன பண்ற?” என்று அவர் கேட்டார்.
நான் இப்ப ஒரு தனியார் கம்பெனியல வேலையில இருக்கேன்” என்று நான் சொன்னேன்.
என்ன சம்பளம்? என்று அவர் கேட்டார்,
எனக்கு மாதம் 4000ரூபாய் என்றேன் நான்.
ஐய்யா, “நான் இந்த வேலையை விட்டுவிடலாம்” என்று முடிவு செய்திருக்கிறேன். “புதிதாக ஏதாவது தொழில் தொடங்கலாம்” என்று உத்தேசித்து உள்ளேன், என்று சொன்னேன்.
“நான் சொல்லிட்டேன் இல்ல.. உனக்கு நேரம் சுத்தமா நல்லாயில்ல. நீ இப்ப இந்த வேலையை விட்டு விட்டா உனக்கு அடுத்த வேலை கிடைக்காது. நீ இப்ப தொழில் தொடங்கினா.. அது சுத்தாமா நஷ்டமாயிடும். நீ இப்ப எது தொட்டாலும் துலங்காது” என்று தொடர்ந்து எதிர்மறையான பலன்களை மூஞ்சியில அடிச்சார் போல சொல்லி முடிச்சார்.
அதை கேட்டு, அப்படியே என் அம்மா இடிஞ்சிபோயிட்டாங்க.
“என்ன, ஐய்யா இவ்வளவு மோசமான பலனை சொல்லீறீங்களே! என்ன பன்ன?” என்று என் அம்மா கேட்க,
அதான் சொல்லிட்டேனாமா, நீ ஒன்னும் செய்ய முடியாது.” என்று சொன்னார் அவர்.
அடுத்து அம்மா, “கல்யாணம்” அப்படின்னு, சொன்னதும்...
“இன்னும் பதினொறு மாசத்துக்கு, நீ ஒன்னும் பண்ண முடியாதும்மா” என்றார் அவர்.
இந்த பலனை எல்லாம் நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்தேன். சரி, அவரிடம் வேறு ஒன்னும் கேட்காமல் அடுத்து என்ன செய்யலாம்?, என்று யோசனையுடனே அவருக்கு கொடுக்க வேண்டிய 50ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியேறினோம்.

“போன ஜோசியர் என்னான்னா, நீ இப்ப தொழில் பண்ணாலாம்ன்னு” சொன்னாரு, “இவரு என்னான்னா நீ எது தொடங்குனாலும் இப்ப விளங்கவே விளங்காதுன்னு” சொல்றாரு எது தான் சரி. இப்ப எதை நம்புறதுன்னு தெரியல? என்னத்தை செய்றதுன்னும் தெரியல? என்று குழம்பினேன்.

ஜாதகத்தில நெகடிவ் பலன்கள் வரத்தான் செய்யும், அதுக்காக இப்படியா மூஞ்சியல அடிச்ச மாதிரி சொல்லி என்னுடைய ஒட்டு மொத்த தன்னம்பிக்கையையும் இப்படியா சாகடிக்கறது.

“ஏன்டா... இந்த ஜோதிடரை போயி பார்த்தோம்?” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், அம்மாவிடம் இப்ப என்னம்மா பண்றது? ஒரே குழப்பமாகவே ஆயிடிச்சுன்னு நொந்து போயி கேட்டேன்.

பூக்கள் மலரும்…..

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

mooda nambikayil moolghi irukum ungalai paarthu pavamagha iruku brother

மதி சொன்னது…

அடுத்து பூக்கள் எப்பொழுது மலரும்....

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.