கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு பதிவு. இது ஒரு அனுபவ பதிவு. நான் பேருந்தில் பயணித்த போது, எனக்கும் ஒரு பெரியவருக்கும் ஏற்பட்ட நட்பு உரையாடலின் ஒரு தொகுப்பு. பதிவின் நீளம் கருதி இரண்டாகப் பிரித்துள்ளேன்.

வேலூர் பேருந்து நிலையத்தில் இரவு 9.00 மணிக்கு, தஞ்சாவூர் செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் கும்பகோணம் செல்ல வேண்டும். அங்குள்ள பேருந்து மணிகாப்பகத்திற்கு சென்று, நான் கேட்டேன், “தஞ்சாவூர் செல்லும் பஸ் வந்து விட்டதா?” அதேநேரத்தில் இன்னொரு நபரும், இதே கேள்வியை அந்த நடத்துனரிடம் கேட்டார். “இருவருக்கும் ஒரே பதிலாக 9.30 மணிக்கு தான், அதோ அந்த பக்கத்தில் காஞ்சிபுரம் செல்லும் பஸ்ஸிற்கு பக்கத்தில் வண்டி வந்து நிற்கும் என்று சொன்னார்.”


பிறகு நான் அவர் சொன்ன இடத்திற்கு சென்று நின்றேன். அவரும் அதே இடத்திற்கு வந்து நின்றார். இருவரும் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த பக்கத்தில் ஒரு பிராமண குடும்பம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், இன்றைக்கு நமக்கு இடம் கிடைப்பது சற்று கடினம் தான் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அதே சந்தேக மனத்துடன், அருகில் இருந்த அந்த நபரும் என்னருகே வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
"எனக்கு சொந்த ஊர் திமிரிங்க. நான் நிறைய தடவை ஆரணியிலிருந்து வண்டி ஏறியிருக்கிறேன். ஆனால் அங்க இருந்து ஏறினா உட்கார இடம் கிடைப்பதில்லை. அதனால் தான் திமிரியிலிருந்து நேரா வேலூர்க்கு வந்துட்டேன். இங்கே ஏறினா உட்கார இடம் கிடைக்குமில்ல என்று என்னிடம் கேட்டார் அந்த பெரியவர்."
நான் நிச்சயமாக கிடைக்கும் என்றேன். தொலை தூர பயணிகளுக்கு தான் முன்னுரிமை. நமக்கு இடம் கொடுத்த பிறகு தான் வழி டிக்கெட்டுகளை நடத்துனர் ஏற்றுவார் என்றேன். ஏனென்றால் சென்ற வாரம் தான் நான் இதே வண்டியில் பயணித்தேன். அந்த நடத்துனர் அப்படி தான் செய்தார். இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்தால் நாம் இடம் பிடிப்பது சற்றே கடினம் என்றேன். அவரும், “ஆமாம், அருகிலிருந்த அந்த பிராமண குடும்பத்தை பார்த்து சொன்னார்”. “இவர்கள் எங்கு செல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் ஏறினால் நிச்சயம் நமக்கு இருக்கை கிடைப்பது சற்றே கடினமான விஷயம் தான் என்றோம்இருவரும் ஒருமித்தாக.
சரி பார்த்துவிடலாம்! இருவருக்கும், ஒரு ஒரு இருக்கை தானே தேவை. எனவே எளிதாக பிடித்துவிடலாம். பயப்பட வேண்டாம் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டோம். மணி 9.30 தே ஆகிவிட்டிருந்தது. ஆனால் இன்னும் பேருந்து வந்தபாடில்லை. மணி 9.35க்கு வந்தது, வரும்போதே அதில் பயணிகள் ஓடிப் போய் ஏறி இருக்கையைப் பிடித்தனர். நானும், பெரியவரும் ஏறிச்சென்றோம். அவர் முதலில் இருக்கையைப் பிடித்தார். நானும் அவர் அருகிலேயே ஜன்னல் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டேன்.
அந்த பெரியவர் தொடர்ந்து பேச்சுக் கொடுக்கலானார். "அவர் திமிரியில் நெல் வியாபாரம் செய்துக் கொண்டிருப்பதாகவும், ஒரு நாள் தான் அங்கு இல்லை என்றால் லட்சக்கணக்கில் பணப்பட்டுவாடா பாதிக்கப்பட்டுவிடும்" என்றும் கூறினார். அவரிடம் கடன் வாங்க வரும் விவசாயிகளின் மனநிலையைப் பற்றிக் கூறினார். "அவர்களுக்கு கம்ப்யூட்டர் கொண்டு கணக்கு போட்டு நான் சொல்லிவிட்டால், அவர்களை நான் என்னமோ ஏமாற்றி விடுவதுபோல், விவசாயிகள் குறைகூறுவதாகவும், அதனால் அவர்களுக்கு உரிய முறையில் பழைய காலத்துப் பாணியில் இன்னமும் கணக்கு நோட்டுகளை கொண்டு கணக்கு எழுதிவைத்து, அவர்களை அரை மணி நேரம் உட்கார வைத்து, கணக்கு போட்டு பிறகு இவ்வளவுதான் உன்னுடைய பாக்கி, என்று சொன்னால் தான் அவர்கள் நம்புவார்கள்" என்று வெள்ளந்தியாக சொன்னார்.
அவர் அடுத்தாக, இந்த தலைமுறையினரின் திருமண விசேஷங்களையும் சற்றே கடுமையாக விமர்சித்தார். "முன்பெல்லாம் திருமண என்றால் ரெண்டு நாளைக்கு முன்னரே குடும்பத்துடன் சென்று விடுவார்கள். கல்யாணம் முடிந்த பிறகு தான் சொந்தக் காரர்கள் எல்லாம் போவார்கள். இன்று காலம் ரொம்ப மாறிப் போச்சு, இன்னைக்கு குடும்பத்துக்கு ஒருத்தர் மட்டும் தான் தலைக்காட்டுறாங்க. அதுவும் ரிசெப்ஷன் மட்டும் தான், காலையில கல்யாணத்தப்ப தாலிக் கட்டும் போது வெறும் 100, 200 பேரு தான் இருக்காங்க. அதோட ரொம்ப ரொம்ப மோசமான விஷயம் என்னவென்றால், கல்யாணத்திற்கு பட்ஜெட் போடும் போது, “சரக்குக்கும்சேர்த்து போடுகிற பழக்கம் வந்துவிட்டது. இது எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவினை காட்டுகிறது" பாருங்கள். சின்னதுல இருந்து பெருசுங்க வரைக்கும் குடிச்சுட்டு ஆட்டம் போட்டே ஆகனும் என்கிற மனப்பான்மை வந்துடுச்சி.(….. என்ன கொடுமை சார்……!!!!!)
அடுத்து இந்த காலத்து பசங்களைப் பற்றி சொன்னார். "பசங்களுக்கு மொபைல் வாங்கிக் கொடுக்கிறதுல தப்பு இல்லஆனால் அவங்க அதை வைச்சிக்கிட்டு என்ன பண்ணறாங்க அப்படின்னு கவனிக்கறது இல்ல….அதே மாதிரி பசங்களுக்கு, வண்டி வாங்கி தரதும் தப்பு இல்ல. ஆனால் அதே சமயத்துல ஒரு கண்ட்ரோல்ல வச்சுகிடணும்.. ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் கோட்டாஎன்று ஒதுக்கி அதை உபயோகப்படுத்த பழக்கணும். காலையில எழுந்து போயி மார்க்கெட் போயி, ஏதாவது வாங்கி வரப் பழக்கணும், மீதி காசை தவறாமா கணக்கு பார்த்து வாங்கணும். இந்த மாதிரியெல்லாம் இப்ப யார் பண்றா?"
"மனுஷன் சாப்படற உணவே விஷமாயிடுச்சு" என்றார். முன்பெல்லாம் வர அரிசியை சமைச்சி சாப்பாட்டால் ஒரு குண்டான் சாதத்தை ஒரே ஆள் சாப்பிடலாம். நிறைய சாப்பிடலாம். ஒன்னும் ஆகாது. ஆனால் இப்ப வர அரிசியை சமைத்து, இரண்டு அன்னக்கை சாதம் சாப்பிட்டாலே வயிறு ரொம்பிடுது. அந்த அளவிற்கு உரங்கள் அரிசியினை விஷமாக்கிடுச்சு. முன்னெல்லாம் மீந்துபோகிற சாதத்தை தண்ணி ஊத்தி வைத்து அடுத்த நாள் பழையதா சாப்பிடல்லாம். ஆனால் இப்ப வர சாதத்தை அடுத்த நாள் சாப்பிட போனால் ஒரே பிசு பிசுன்னு ஒட்டுது. போதக்குறைக்கு வாடை வேற வருகிறது. சாப்பாடே விஷமாயிடுச்சு."
"பார்த்தீனியம் செடிப் பற்றி  நீங்கள் கேள்விப்பட்டிருக்கீங்களா" என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் "தெரியாது" என்றேன். உடனே அவர், "1970 களில் இந்தியாவில் உணவு பற்றாக்குறை தலைவிரித்தாடிய சமயம் அது. அந்த சமயத்தில் இந்தியா, அமெரிக்காரன் கொடுக்கிற கோதுமைக்காக கப்பல் எப்ப வருமென்று காத்துகொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்துல தான் அவன் கொடுத்த அந்த கோதுமையோட பார்த்தீனிய செடிகளோட விதைகளும் கலந்து வந்துடுச்சி. அவன் கொடுத்த அந்த கோதுமையை சளித்து அந்த விதைகளை நம்ம ஆளுங்க தூக்கி கொட்டினாங்க. அவங்க கொட்டின அந்த இடமெல்லாம் இந்த பார்த்தீனியம் என்கிற விஷச் செடி முளைச்சு காடா மாறிடுச்சு. இந்த செடி முளைச்சிட்டா அந்த நிலத்துல வேற எதையும் பயிரிட முடியாது. மேலும் அந்த விதையோட வீரியமும் பல மாசங்களுக்கு அப்படியே இருக்கும். அதாவது அந்த விதைகள் மண்ணுக்குள் 3 லிருந்து 6 மாசம் இருந்தாலும், அதை மீண்டும் வெளியே எடுத்து போட்டாலும் அது செடியாக வளர்ந்து விடும். அந்த அளவிற்கு மோசமான அந்த விஷச் செடி இப்ப தமிழகம் முழுவதும் பரவி பாதி விளை நிலைங்களை ஆக்கிரமித்து இருக்கிறது" என்றார்.
"பழைய சோறும், மாம்பழம் சேர்ந்து சாப்பிடற போது கிடைக்கிற பலம் வேற எதுலயும் கிடையாது. இன்றைக்கு தாம்பத்தியல பல பேருக்கு திருப்தி இருக்கிறது இல்லை. அதற்கு என்னென்னமோ சாப்பிட்டு பார்க்கிறான், ஒன்னும் சரியாக மாட்டேங்கிறது. ஆனால் அந்த காலத்துல பையன் கட்டுக்கடங்கமா திரிஞ்சா அவனுக்கு கொடுக்கிற சோற்றையும், மாம்பழத்தையும் குறைக்க சொல்லுவாங்க. அதாவது பழைய சோற்றையும் மாம்பழத்தையும் தொடர்ந்து 6 மாசம் சாப்பிட்டு வந்தா போதும், அந்த பையனுக்கு ஒரு பொன்னை தொட்டு பார்க்கணும்னும், அடையுனும்ன்னும் ஒரு வெறியே வருமாம். ஆனால் இன்றைக்கு அதோட மகத்துவம் யாருக்கும் தெரியவில்லை." என்று மாம்பழத்தை பற்றி நமக்க தெரியாத ஒன்றையும் கூறினார். 


(........தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.