கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 17 பிப்ரவரி, 2011

குழலி !!!



மணியடித்ததும் குழலி அவசர அவசரமாக தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை தன் தோள் பையில் முழுவதும் உள்ளே சொருக முடியாமல் பாதியிலேயே வைத்துவிட்டு தன் பேனா, பென்சில், ஸ்கேல் ஆகியவைகளை கைகளில் வாரிக் கொண்டு தன் தேர்வு நுழைவு சீட்டினை தேடி கைகளில் எடுத்துக் கொண்டு தேர்வு அறைக்குள்ளே சென்றாள்.

தன் தேர்வு எண் எழுதப்பட்ட இருக்கையைக் கண்டுபிடித்து சற்றே படப்படப்புடன் அமர்ந்தாள். தான் கடைசியாக படித்த பாடங்களை சற்றே நினைவுப் படுத்தி கொண்டிருந்தாள். தேர்வு அறைக்குள் நுழைந்த கண்காணிப்பாளர் எல்லோருக்கும் விடைத் தாளினை அளித்துக் கொண்டிருந்தார். குழலி தன் விடைத் தாளினைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய விவரங்களை முதல் பக்கத்தில் எழுதி முடித்துவிட்டு கேள்வித் தாளுக்காக காத்திருந்தாள்.

மணியடித்ததும் கேள்வித் தாள் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டது. கேள்வித் தாளிளை அவரசமாக திருப்பிப் பார்த்துவிட்டு தனக்கு தெரிந்த எல்லாக் கேள்விகளும் வந்திருப்பதைப் பார்தது நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். தனக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு முதலில் மிக ஆர்வமாக விடைகளை வேகமாக அழகாகவும் எழுத தொடங்கினாள்.

தங்கு தடையின்றி படித்த எல்லாப் பாடங்களும் அவளுக்கு நினைவில் வர தன்னை அறியாமலே முக்கால் மணி நேரத்திற்குள் நான்கு பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு விடையெழுதி முடித்துவிட்டிருந்தாள். அடுத்த ஒரு கேள்விக்கு பதில் சரியாக ஞாபகம் வராததால் அடுத்து இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை எழுத ஆரம்பித்தாள்.

அப்போது இரண்டு கண்கள் அவளை உற்று நோக்குவது போல் அவள் உணரலானாள். யார் அது பக்கத்து இருக்கை கயல்விழியாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் அவளை திரும்பிப் பார்க்கிறாள். ஆனால் கயல்விழியோ மிகவும் சிரத்தையுடன் பதில்களை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தாள் குழலி. பிறகு யார் என்னைப் பார்த்தது என்று சற்றே குழப்பத்துடன் மீண்டும் எழுத தொடங்கினாள். தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கடந்துவிட்டிருந்தது.

மீண்டும் அதே திசையில் தன்னை யாரோப் பார்ப்பது போல் உணர்ந்தாள். அவளுக்கு ஏதோ போல உறுத்தியது. உடனே சற்றே திரும்பி வலப்பக்கம் பார்த்தாள். ஆம் ஜன்னலின் வழியாக அவளை இரண்டு கண்கள் வைத்த கண் எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தது. யாரென சட்டென்று உணர்ந்துகொண்டாள். இருந்தாலும் தான் தேர்வு எழுதி முடிக்க வேண்டுமென்ற சிரத்தை அதிகமாக இருந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமல் தேர்வினை முன்பை விட இன்னும் வேகமாக எழுதிவிட வேண்டுமென்று இன்னும் தன் எழுதும் வேகத்தினை அதிகரித்தாள்.

அடுத்த ஒரு மணி நேரமும் அந்த பக்கம் அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே விடைகளையும் வேகமாக எழுதி முடித்தாள். அடுத்த அரைமணி நேரம் எல்லா விடைகளை சரிபார்ப்பது மற்றும் தலைப்புகளுக்கு அடிகோடிவது மற்றும் நிறமிடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு தான் எழுதிய விடைகளையும் சரிபார்த்து முடித்துவிட்டு நன்றாக தேர்வெழுதிய நிம்மதியுடன் மீண்டும் ஜன்னலைப் பார்த்தாள் அந்த கண்கள் அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. அவள் தேர்வெழுதும் அழகினை முழுவதுமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

சற்றே மகிழ்ச்சியுடனும் ஆச்சரியமுடனும் தன் விடைத்தாளினை ஆசிரியரிடம் அளித்து விட்டு நேராக அந்த ஜன்னலில் நின்றுக் கொண்டிருந்த முகுந்தனின் கையைப் பிடித்து பள்ளி திடலை நோக்கி அழைத்து சென்றாள். அந்த பள்ளி திடலில் ஏராளமான மரங்கள் இடைவெளி விட்டு நன்றாக வளர்ந்திருந்தன. மிக அழகாக பூத்து குலுங்கும் சிவப்பு நிற மலர்கள் அந்த பள்ளி வளாகத்தையே ரம்மியமாக வைத்திருந்தது. அந்த திடலே ஒரு சிவப்பு வனம் போல அழகாக இருந்தது. உச்சி வெயிலாக இருந்தாலும் இங்குள்ள மரங்களால் நிழலும் குளுமையும் இயற்கையாகவே அமைந்திருந்தது.

அந்த குலுமையில் அவள் கைப்பட்டதும் மேலும் குளுமை அடைந்திருந்தான் முகுந்தன். அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் கண்களில் காதல் ரசத்தினை தவிர வேறு எதுவும் அவளுக்கு தெரியவில்லை.  முகுந்தனோ கண்களை எடுப்பதாயில்லை.

என்ன முகுந்தா! என்னை விழுங்காமல் விடமாட்டாய் போலும் என்றாள். சரி இப்போதாவது சொல் எதற்காக நான் தேர்வு எழுதும் அறைக்கு வந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்.

குழலி உனக்கு தெரியாதா என்ன? நான் உன்னை காதலிப்பது.

ஆமாம் நீ என்னை காதலிக்கிறாய். அதற்காக நாளை பரிட்சைக்கு கூட படிக்காமல் எதற்காக இங்கே வந்து கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள் குழலி.

நான் படித்துக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் எனக்கு நினைவு முழுவதும் உன்னை பற்றியே இருந்ததால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் உன்னை வந்து பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த பிறகு எனக்கு போக மனமில்லாமல் இங்கேயே நின்று விட்டேன் என்றான் முகுந்தன்.

அப்படியா! சரி வா, இங்கே உட்கார்ந்து பேசலாமென்றாள். இருவரும் அந்த மரத்தினடியிலமர்ந்தனர். முகுந்தன் அவள் கைகளை விடுவதாயில்லை. அவளும் ஆசையோடு அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். பிறகு சொல்லலானாள். முகுந்தா,  நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றாள். குழலி! நீ பேசினாளே போதும், என்ன வேண்டுமென்றாலும் சொல், நான் கேட்கிறேன் என்றான்.

வெட்கத்துடன், சரி முகுந்தா இப்போது சொல்வதைக் கேள் என்று கதையை சொல்ல தொடங்கினாள் குழலி.

சுந்தரன் என்னும் ராஜா தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் நன்றாக ஆட்சி புரிந்து வந்தான். அவனது பட்டத்து அரசியாக அமிர்தவள்ளி என்பவள் அவனது அரண்மனையை அலங்கரித்தாள். சுந்தரனும் அமிர்தவள்ளியும் இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக காதலித்து பின்னர் இருவரும்  திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அவர்களின் காதலில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் இருவரும் தங்கள் காதலினை மேலும் வளர்த்து வந்தனர். ராஜா சுந்தரன் வீரத்திலும், அழகிலும் குறைவில்லாதவன். அதுபோல அமிர்தவள்ளி மிகவும் அழகானவள். அறிவிலும் சிறந்தவள். அவளை அரசியாக கொண்டதால் சுந்தரனும் பெருமையடைந்திருந்தான். சுந்தரன் அமிர்தவள்ளியின் அழகிலே மயங்காத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சுந்தரன் தன் மனைவியின் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தான்.

இப்படி மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. ஆம், எதிரி நாட்டு அரசன் மதுசூதன் சுந்தரன் மீது படையெடுத்து வருவதை அறிந்தான். உடனே தன் அமைச்சர் நகுலனை அழைத்து ஆலோசனை செய்தான் சுந்தரன். எதிரி நாட்டு அரசன் மதுசூதனை எப்படி தடுத்து விரட்டியடிப்பது என்று நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பிறகு அமைச்சரின் ஆலோசனைப் படி மதுசூதனை நமது நாட்டின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதென முடிவு செய்தான் சுந்தரன். உடனடியாக தளபதி வேங்கைய்யனை அழைத்து படைகளை திரட்டி கொண்டு எல்லையில் அரண் அமைக்க உத்தரவிட்டான்.

தளபதியும் தன் படைபரிவாரங்களுடன் எல்லையில் இரவோடு இரவாக கூடாரங்களை அமைத்து போர் வியூகங்களை வகுக்கலானான். எதிரி நாட்டு மதுசூதனின் படைகள் மன்னர் சுந்தரனின் படைகளுக்கு சம பலம் பொருந்தியதே. எனவே முதலில் எந்த படையை கொண்டு தாக்கினால் வருபவர்களின் பலத்தை உடனடியாக இழக்க செய்யலாம் என்று திட்டமிட்டான் தளபதி. அவன் சரியான திட்டமிடுதலோடு அரசரும் போர்களத்தில் இறங்கினால் நம்மால் எளிதில் மதுசூதனை சரியாக 10 நாட்களில் வீழ்த்திவிட முடியுமென்று நம்பினான். உடனே அரசருக்கும் தன்  திட்டத்தினை தெரிவித்தான் தளபதி வேங்கைய்யன். அரசரும் தளபதியும் திட்டத்தை ஏற்றுக் கொண்டு போர் களத்தில் தானும் சண்டையிட விருப்பம் தெரிவித்தான் சுந்தரன்.

அதன்படி அடுத்த நாள் விடியல் தாண்டி உச்சி நெருங்கும் வேளையில் மதுசூதனின் படைகள் எல்லையை நெருங்கி விட்டன. தளபதியின் திட்டத்தின் படி நெருங்கிய மதுசூதனின் படைகளை சுந்தரன் படைகள் முதலில் யானை படையை கொண்டு தாக்கியது. முதலிலேயே யானை படையால் தாக்கப்பட்டதால் மதுசூதனின் படைகள் நிலை குலைய ஆரம்பித்தது. அந்தி வரையிலானா தாக்குதலில் சுந்தரன் படைகளுக்கே வெற்றிக் கிட்டியிருந்தது. முதலாவது நாள் போரின் முடிவில் அன்று மாலை கூடாரத்தில் சுந்தரன் தன் தளபதி வேங்கைய்யனின் திறமையை வெகுவாக புகழ்ந்தான்.  இரவும் வந்தது. வீரர்கள் அனைவரும் தம் காயங்களுக்கு மருந்திடுவது, உணவருந்துவது என்றும் உறங்க செல்வதுமென்றுமிருந்தனர். இன்று அரசன் போர் களத்தில் சண்டையிடவில்லை.

காரிருளும், குளிர்ந்த நிலவும் சுந்தரனுக்கு அமிர்தவள்ளியை ஞாபகமூட்டின. தன் மனைவியை நினைத்து உருகலானான் சுந்தரன். திருமணம் ஆன இந்த நாள் வரை அமிர்தவள்ளியை ஒரு இரவு கூட பிரிந்த இருந்தததே இல்லை என்பதை சுந்தரன் நினைத்து பார்த்தான். இந்த இரவு அமிர்தவள்ளியில்லாமல் இவ்வளவு மோசமாக இருக்கிறதேயேன்று தன்னை தானா நொந்து கொண்டான். இருந்தாலும் இந்த பிரிவினை அமிர்தவள்ளிக்கு உடனே தெரிவிக்க எண்ணினான். ஆனால் எல்லா வீரர்களும் உறங்க சென்றதால் நாளை தெரிவித்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் சுந்தரன்.

அடுத்த நாள் வேறொரு வியூகத்தோடு தளபதி வேங்கைய்யன் மதுசூதனின் படைகளை மீண்டும் திணறடித்தான். சுந்தரனோ அமிர்வள்ளிக்கு தன் காதலை மடலாக வடித்து செய்தி அனுப்பினான். இந்த நாளின் முடிவிலும் மதுசூதனின் படைகளுக்கு பெரும் பின்னடைவாக தான் இருந்தது. இன்றும் சுந்தரன் போரிலே பங்கேற்வில்லை. தளபதி வேங்கைய்யன் இருக்கும் வரை நான் கவலைப் படத் தேவையில்லை என்று மகிழ்வோடு தளபதியை புகழ்ந்தான் சுந்தரன். அன்று இரவே அமிர்தவள்ளியிடமிருந்து சுந்தரனக்கு செய்தி வந்தது. "இது தற்காலிக பிரிவு தான்! அன்பே கலங்காதிரு போரில் வெற்றிப் பெற்று வாங்கள்!" என்று கூறியிருந்தாள்.

ஆனால் சுந்தரனுக்கோ மனசு கேட்கவில்லை. மீண்டும் அமிர்தவள்ளியை நினைத்துக் கொண்டு உருகலானான். மீண்டும் தன் நினைவெல்லாம் நீயே இருக்கின்றாய் என்றும் உன்னைப் பார்க்க வேண்டுமென்றும் மடல் அனுப்பினான். மூன்றாவது நாள் யுத்தம் ஆரம்பித்தவுடன், மதுசூதனின் படைகள் சற்றும் எதிர்பாராத விதமாக புது வியூகத்துடன் மிக மூர்க்கத்தனமாக பல குழுக்களாகப் பிரிந்து தாக்கினர். இன்று தளபதி வேங்கைய்யனின் கணக்கு தவறானது. எனவே சுந்ரதரனின் படைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. சுதாரிப்பதற்குள் சுந்தரனின் படைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஆனது. இருந்தாலும் சுந்தரனின் படைகள் மதுசூதனின் படைகளை ஓரளவு சாமாளித்தே விட்டது. அன்று அந்தியில் சுந்தரனின் படைகள் பின்னடைவுடன்  கூடாரத்திற்கு திரும்பியது.

இன்று சுந்தரன் சற்றே வாட்டத்துடன் காணப்பட்டான். மேலும் இன்று போரில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவினையும் அதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்குமாறு தளபதிக்கு உத்தரவிட்டான். ம்துசூதனின் படைகள் இன்று போர் தந்திரத்தை மாற்றி போரிட்டதும் அதை சுதாரிப்பதற்குள் நம் படைகளுக்கு பெருத்த அடி விழுந்ததும் தான் காரணமென்றான் தளபதி. ஆனால் இந்த உரையாடலில் அவ்வளவாக விருப்பம் காட்டிக் கொள்ளாமல் சுந்தரன், சரி நாளை நன்றாகப் போரிடுங்கள் என்று கூறி விட்டு சென்றான்.

அதே நேரத்தில் போர்க் களங்களில் நடப்பதை அவ்வப்போது அறிந்து கொண்டே இருந்தாள் அமிர்தவள்ளி. அவளுக்கு இன்று அரசரின் ஈடுபாடற்ற செயல்பாடுகளும் தெரிவிக்கப்பட்டன. அவளுக்கு சற்றே அதிர்ச்சியளித்தது. காரணம் நாட்டுக்கே ராஜா இப்படி போர்க்களத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பது ஏன் என்று சிந்திக்கலானாள். சிந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அரசரிடமிருந்து மீண்டும் மடல் வந்தது. அதிலே மீண்டும் சுந்தரன் தன் என் ஞாபகமாகவே இருப்பதை அறிந்து கொண்டாள் அமிர்தவள்ளி. அரசரின் இந்த நிலைமை போர்க் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தன்னம்பிக்கை இழக்க செய்து விடும் என்பதை உணரலானாள். எனவே அரசரை தன்னம்பிக்கை அடைய செய்யும் பொருட்டு அரசருக்கு அவள் பதில் மடல் ஒன்றை அனுப்பினாள். "நாட்டின் ராஜா நீங்களே இப்படி இருந்தால் நாட்டையும், நாட்டு மக்களையும், உங்களையே நம்பிக் கொண்டிருக்கும் என்னையும் யார் காப்பாற்றுவது, எனவே கடமையுணர்ந்து போர்புரியுங்கள்" என்று உணர்த்தினாள்.

மறுநாள் யுத்தம் ஆரம்பித்ததும் தளபதி வேங்கைய்யனை முற்றுகையிடும் வியூகத்தினை மதுசூதனின் படைகள் வெற்றிக் கரமாக செயல்படுத்தினர். தளபதியும் தன் முழு வீரத்தையும் காட்டி போர் புரிந்தான். மதுசூதனின் படைகளை முடிந்த அளவு துவம்சம் செய்தான். இறுதியில் மதுசூதன் தன் தந்திரத்தால் நொடிப் பொழுதில் தளபதி வேங்கைய்யனின் தலையை துண்டாக்கி விட்டான்.  தளபதியை கொன்றதோடு மேலும் சுந்தரனின் படைகளை பந்தாடியது மதுசூதனின் படைகள். தளபதி இறந்த செய்தியைக் கேட்டு சுந்தரனே போரில் குதித்தான். போரில் இறங்கி மதுசூதனின் படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து சமாளித்தான். தளபதியை இழந்த பெருத்த இழப்போடு சுந்தரனின் படைகள் அன்று மாலை பாசறைக்கு திரும்பின. துயரத்திலிருந்த சுந்தரன் அன்று இரவும் வழக்கம் போல மீண்டும் அரசிக்கு மடல் ஒன்றை அனுப்பினான்.

இன்று தளபதி இறந்த செய்திக் கேட்டு அதிர்ந்தாள் அரசி. அரண்மனை வாசலில் தளபதியின் மனைவி தலைவிரி கோலத்துடன் மரியாதைக்கு வைக்கப் பட்டிருந்த தளபதியின் உடல் அருகே அழுதுப் புலம்பிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த அரசியிடம் தளபதியின் மனைவி அழுது ஓலமிட்டாள். நாட்டிற்காக இன்னுயிரை ஈந்தவர் உன் கணவர், நாங்கள் இருக்கிறோம் உனக்கு ஆதரவாக என்று ஆறுதல் சொன்னாள் அரசி. என் கணவன் நாட்டைக் காக்கும் தளபதிப் பொறுப்பை ஏற்றுவிட்டு இப்படி போரிலே வெற்றிக் கொள்ளாமல் நாட்டு மக்களையும் காப்பாற்றாமல் போய்விட்டானே என்பதே என் வருத்தம் அரசியாரே என்றாள் தளபதியின் மனைவி. என் கணவன் போனால் என்ன இந்த நாட்டு மக்களை காப்பாற்ற நம் அரசர் இருக்கிறார் என்றாள் நம்பிக்கையோடு. அரசிக்கு ஆச்சரியம் கலந்த வருத்ததுடன் தளபதியின் மனைவியை நோக்கினாள். இவளுக்கு தான் தன் கணவன் மீதும் நம் நாட்டின் அரசர் மீதும் எவ்வளவு நம்பிக்கை என்று எண்ணி அரசி வியந்தாள். இருந்தாலும் வேறு ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றாள் அரசி.

இந்நிலையில் மன்னர் அனுப்பிய மடலைப் பெற்றுக் கொண்டு படித்தாள் அரசி. மன்னர் இன்றும் தம் நினைவாகவே இருப்பதை உணர்ந்து கொண்டாள். "வாள் பிடித்து போரிடும் போதும் என் கண்ணில் உந்தன் முகம் தான்" என்று மன்னர் எழுதியிருப்பதை பார்த்து மேலும் அச்சமுற்றாள். ஏன் இப்படி நம் கணவர் புரிந்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்கிறார் என்று குழப்படைந்தாள்.மேலும் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தாள். "என் நினைவினை அகற்றி நன்றாகப் போர் புரிந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்" பதிலுக்கு மடலினை காலையில் அனுப்பினாள். அரசனும் காலையிலே அரசியின் மடலை ஆவலாக எதிர்பார்த்திருந்தான். மடல் வந்ததும் ஆர்வத்துடன் பிரித்துப் படித்தான். அரசியின் பதில் ஏமாற்றத்தை அளிப்பதாக உணர்ந்தான். ஏமாற்றத்துடன் ஆர்வமில்லதவனாக போர்க் களத்திற்கு புறப்பட்டான்.

இன்றோ மதுசூதனின் படைகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டனர். முதல் இருநாட்கள் அடைந்த பின்னடைவிற்கு பலத்த பதிலடியாக இன்று திருப்பிக் கொடுத்தனர். முன்னதாக வேங்கைய்யனின் துணைத் தளபதி புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான். சுந்தரனின் படைகள் போர்க் களத்தில் புதிய தளபதியின் வழிநடத்துதலில் ஓரளவிற்கு சாமாளித்தனர். வேங்கைய்யனின் போர்ப் பயிற்சினால் வீரர்கள் அனைவருமே நல்ல திறமையுடன் இருந்ததால் துணைத் தளபதிக்கு சமாளிப்பதற்கு சற்றே எளிதானது. களத்தில் துணைத் தளபதியின் போர் நுணுக்கத்தால் மீண்டும் எழுச்சிப் பெற்றது சுந்தரனின் படைகள். சுந்தரனும் தன் பங்கிற்கு மதுசூதனின் படைகளை ஒரு பக்கம் வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தான். தற்போது இருபடைகளும் மீண்டும் சமபலத்தினை அடைந்தன.

இதற்கிடையே மீண்டும் போரின் நடு நடுவே சுந்தரன் தன் அரசிக்கு ஓலை அனுப்பிய படியே இருந்தான். ஒவ்வொரு முறையும் அவள் முகம் காண வேண்டுமென்று விரும்புவதாகவே ஓலை அனுப்பிக் கொண்டேயிருந்தான். அரசியிடமிருந்து எந்த பதிலும் வராததால் சற்றே ஏமாற்றத்துடனே போர் புரிந்து கொண்டிருந்தான். அப்போது மதுசூதனின் திறமை வாய்ந்த தளபதியினால் சுந்தரன் படையின் துணைத் தளபதி வெட்டி சாய்க்கப் பட்டான். ஆத்திரத்தில் உடனே சுந்தரனும் தன் பங்கிற்கு மதுசூதனின் தளபதியை வெட்டி சாய்த்துவிட்டான். இருந்தாலும் புதிய தளபதியின் மரணம் போர்க் களத்தில் சுந்தரனின் படைகளுக்கு பெருத்த பின்னடைவாகவே ஆனது. தன் தளபதியை இழந்தாலும் மிக உறுதியுடனும் போரிட்டுக் கொண்டிருந்தான் மதுசூதன்.ஒரு கட்டத்தில் மன்னன் சுந்தரனை வளைத்து பிடித்துவிடலாம் என்ற கட்டத்திற்கும் வந்து விட்டான் மதுசூதன். சுந்தரனின் தோல்விக்கு சென்று விட்டானென்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே போர்க் களத்திலிருந்து அரசிடமிருந்து ஓலைகள் வந்த வண்ணமாக இருப்பதை பார்த்து மேலும் வருத்தமும் அச்சமும் உற்றாள் அமிர்தவள்ளி. அவ்வப்போது போர்க் களத்தில் நடக்கின்ற நிலவரங்களையும் உன்னிப்பாக கேட்டு அறிந்து வந்தாள் அரசி. போர்க்களத்தில் புதிய தளபதி வெட்டப் பட்டதையும் தம் மன்னருக்கு ஏற்பட்ட பின்னடைவையும் அறிந்து கொண்டாள் அரசி. மேலும் எதிரி படைகளால் மன்னன் சுந்தரன் சூழப்பட்டுள்ளதையும் அறிந்து துடித்தாள் அரசி.

தன் கணவனை இழந்த பிறகும் தன்னம்பிக்கையோடு இருந்த தளபதி மனைவியின் பேச்சு அரசிக்கு ஞாபகம் வந்தது. அதுபோலத் தானே நம் படையிலுள்ள மற்ற வீரர்களின் மனைவிகளும் தன் கணவர் போரில் வெற்றிப் பெற்று வீடு திரும்புவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் போரில் தோற்றுவிட்டாள் எப்படி ஆறுதல் சொல்வது? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் போரிலே தோற்றுவிடக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டோமல்லவா? அதற்கு மன்னராகிய நம் கணவர் சுந்தரனே பொறுப்பாவாரல்லவா? என் கணவரின் இந்த தோல்விக்கு நானே பொறுப்பாவேனல்லவா? என்னால் தானே என் கணவரால் முழுத் திறமையுடன் போரிட முடியவில்லை? என்று பலவாறாக எண்ணி இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று அரசினிடமிருந்து வந்திருக்கும் ஓலைக்கு பதில் ஓலை தயார் செய்தாள். தன் பணிப்பெண்ணிடம் தான் சொல்லும்படி ஓலையுடன் ஒரு தட்டினையும் சேர்த்து அனுப்ப சொன்னாள். பணிப்பெண் அரசி சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் அதை செய்யவும் மறுத்தாள். பிறகு அரசி கர்ஜித்தாள். சொன்னதைச் செய் இது என் ஆணை என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள் அரசி.

சுந்தரனோ மதுசூதனின் ஆட்களால் தான் சூழப்பட்டிருந்தாலும் அவன் கண்கள் யாரையோ எதிர்பார்த்திருந்தது. ஆம் அவன் எதிர் பார்த்தபடி அரசியிடமிருந்து ஓலை எடுத்து வருபவனைக் கண்டான் சுந்தரன். சிறு ஆனந்தத்தில் தன்னை சுற்றியிருந்தவர்களை துவம்சம் செய்துவிட்டு ஓலையைப் பெற்றுக் கொண்டான். ஓலையுடன் ஒரு பட்டு துணியினால் மூடப்பட்ட தட்டையும் கொண்டு வந்திருந்தான் அவன். மன்னருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அரசன் சற்றே ஒதுங்கினான் ஓலையைப் பிரித்து படித்தான்.

அதில் அமிர்தவள்ளி, " என் சுவாமிக்கு நான் வரையும் கடைசி மடல் இதுவே ஆகும். இப்போதிருக்கும் நிலைமையில் நாம் போரிலே தோற்றுவிடக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டோம். நீங்கள் தளபதிகளை இழந்து எதிரி நாட்டு படையால் சூழப்பட்டுள்ளதை அறிவேன் மன்னா! நம் நாட்டு வீரர்களின் மனைவிகளும் தன் கணவன்மார்கள் போரில் வெற்றிப் பெற்று எப்போது வீடு திரும்புவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். வீரமரணமடைந்த நம் தளபதியின் மனைவி முதல் நாட்டிலுள்ள சின்ன குழுந்தை வரை மன்னராகிய உங்களை மானசீகமாக நம்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் இந்த போரில் தோற்றுவிட்டாள் எப்படி ஆறுதல் சொல்வது? அதற்கு மன்னராகிய என் கணவரே பொறுப்பாவாரல்லவா? என் கணவரின் இந்த தோல்விக்கு நானே பொறுப்பாவேனல்லவா? என்னால் தானே என் கணவரால் முழுத் திறமையுடன் போரிட முடியவில்லை? இதோ என் திருமுகத்தினைப் பார்க்காததால் தானே மன்னா உங்களால் சரியாகப் போரிட முடியவில்லை, இதோ என் திருமுகத்தினை வெட்டி தங்களுக்காக போர்க் களத்திற்கே அனுப்பி விட்டேன், இதோ அந்த தட்டில் உள்ளது, நன்றாகப் பார்த்துக கொள்ளுங்கள் மன்னா, என் முகத்தினை பார்த்த திருப்தியோடு, இனியாவது நன்றாகப் போரிட்டு நாட்டையும், தங்களை நம்பியுள்ள நாட்டு மக்களையும் காப்பாயாக, இல்லையேல் நீங்கள் வீரமரணமடைந்தால் தங்களை வரவேற்க நான் உங்களுக்காக சொர்க்கத்தில் காத்திருப்பேன் இப்படிக்கு தங்கள் அன்பு மனைவி அமிர்தவள்ளி" என்று எழுதியிருந்ததை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போனான் சுந்தரன்.

அவசரமாக அந்த தட்டிலிலுள்ள பட்டு துணியினை தூக்கி எறிந்தான். அதில் தன் மனைவியின் திருமுகத்தினை கண்டவுடன் குலுங்கி குலுங்கி அழுதான். சொல்லெண்ணா துயரத்தில் ஆழ்ந்தான். ஆத்திரமும் வெறியும் கொண்டு பத்து ருத்ரன் ஒன்று சேர்ந்தார் போல் சினங்கொண்டு மதுசூதனின் படைகளை வெறித்தனமாக தாக்கினான். ருத்ரன் ஊழி தாண்டவத்தில் நடனமாடுவது போன்று சுழன்று சுழன்று மதுசூதனின் படைகளை சின்னா பின்னமாக்கி கொண்டிருந்தான். கண்ணில் பட்ட தலைகளை எல்லாம் வெட்டி சாய்த்து கொண்டேயிருந்தான். அவன் கைகளோ ஓய்வெடுப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து வெட்டி கொண்டேயிருந்தான். ஆயிரம் தலைகளில் ஒரு தலையாக மன்னன் மதுசூதனின் தலையையும் வெட்டி சாய்த்துவிட்டிருந்தான், ஆனால் அது அவனுகே தெரியவில்லை.

ஆனால் சுந்தரனோ தொடர்ந்து கத்தியை சுழற்றிக் கொண்டேயிருந்தான். மன்னன் மதுசூதனை நம் மன்னர் சுந்தரன் வெட்டி சாய்த்துவிட்டதையறிந்து படை வீரர்கள் மகிழ்ச்சியில் ஒரே ஆரவாரமிட்டனர். மன்னன் இப்போது தான் உணர்ந்தான், ஆம் நாம் போரினில் வெற்றிப் பெற்றுவிட்டோம். என் அமிர்தவள்ளி வெற்றி பெற வைத்துவிட்டாள். அவளுக்காக் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நான் காப்பாற்றி விட்டேன் என்று கூறிக் கொண்டே மண்டியிட்டு தன் தலையை தானே துண்டித்துக் கொண்டு மண்ணில் வீழ்ந்தான் சுந்தரன் என்று கதையைக் கூறி முடித்தாள் குழலி.

கதையைக் கேட்டு அய்யோ! என்று அலறினான் முகுந்தன். இப்போது சொல் நீ உன் கடமையை செய்யாமல் என்னை வந்து வந்து பார்ப்பதும் நினைத்துக் கொண்டிருப்பதும் சரியா? என்று கேட்டாள் குழலி.

முகுந்தனும் தன் தவறை உணர்ந்து, தன் தவறை மிக சமார்த்தியமாக சுட்டிக் காட்டிய குழலி அவன் கண்களுக்கு இன்னொரு அமிர்தவள்ளியாக தெரிந்தாள்.

முகுந்தன் தன் தவறை உணர்ந்ததை தெரிந்து கொண்ட குழலி, அது சரி அத்தனை மணி நேரமும் என்னையே நீ பார்த்துக் கொண்டிருப்பதை எப்படி அந்த ஆசிரியர் உன்னை கண்டிக்காமல் விட்டார் என்று கேட்டாள் குழலி. அது ரகசியம் என்று பலமாக சிரித்து விட்டு ஓடினான் முகுந்தன்.


ஜோதிடக் குறிப்பு :- 


காதலால் புத்தி மழுங்குதல் என்பது எல்லாக் காலக்கட்டங்களில் அடிக்கடி நாம் பார்ப்பதுண்டு, கேட்பதுண்டு. லக்னத்திற்கு 7மிடம் தான் திருமணம் மற்றும் காதல் வயப்படுதலைப் பற்றி சொல்வதாகும். சுக்கிரன் மற்றும் சந்திரனின் இருப்பிடம் மற்றும் சேர்க்கைகளைக் கொண்டு ஒரு மனிதன் தான் கொள்ளும் காதலால் எந்தவிதமான இன்ப துன்பங்களை அடைகிறான் என்று அறியலாம். ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் அமர்வது, 7மிடத்து அதிபதியுடன் ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, சுக்கிரன் எட்டில் அமர்வது, போன்ற அமைப்புகளால் ஒரு ஜாதகன் தான் கொள்ளும் காதலால் மதியிழந்து செய்வது என்ன செய்கிறோமென்று தெரியாமல் குழம்பி ஒரு குறிப்பிட்ட காலக் கட்டம் வரை காதல் மயக்கத்தில் லயித்திருப்பான். அந்த சம்பந்தபட்ட கோள்களின் திசாப் புத்திகளை கடக்கும் வரை இந்த காதல் பித்தம் நீங்குவதில்லை.

பூக்கள் மலரும்.....

4 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

யப்பா இம்புட்டு நீள பதிவ எப்படி படிக்கிறது? இருங்க ராத்திரி வந்து படிக்கிறேன்! இப்ப ஓட்டுப் போட்டுட்டேன்! கெளம்புறேன்!!

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

ஓட்டுக்கு நன்றி! ஆனா பதிவ படிக்க மறந்துடாங்தீங்க றஜீவன்!

சுதர்ஷன் சொன்னது…

இவ்வளவு பெரியதாக இருந்தாலும் வாசிக்க வாசிக்க சுவாரசியமாக இருந்தது . இந்த கதை என்னையும் ஐயோ என்று கூற வைக்கிறது . ஏன் அந்த மன்னன் எவ்வளவு அன்பு கொண்டிருந்தான் ?அதுக்காக தலையவா வெட்டி அனுப்பிறது .. வேற ஏதாவது செய்திருக்கலாம் ..ஆனால் நன்றாக இருந்தது கதை .. :)

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! தங்களின் அர்த்தமுள்ள இந்துமதத்தினை விளக்கும் முயற்சி என்னை வெகுவாக கவர்ந்தது.

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.